குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.
குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.
இதோ இந்த குரு பெயர்ச்சி மேஷ ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…
மேஷ ராசி :
(அஸ்வினி, பரணி, க்ருத்திகை 1ம் பாதம் முடிய)
85/100
அமைதியான ஸ்வபாவம் கொண்ட மேஷராசி அன்பர்களே!
கடந்த ஒருவருடம் குருபகவான் தங்கள் ராசிக்கு 8ல் அமர்ந்து சாதகமற்ற நிலையை தந்திருப்பார். அவர் தற்போது பாக்கிய ஸ்தானத்துக்கு போய் வேண்டிய அனைத்தையும் தந்திடுவார். ராகு-கேது வும் நல்ல நிலையில் இருப்பதால் எதிர்பார்ப்புகள் ஈடேறும்.
சனிபகவான் ஜனவரி 23,2020ல் மகரத்துக்கு பெயர்கிறார் இது கொஞ்சம் இடைஞ்சலை தரும் இருந்தாலும் குருவால் நல்ல பலன் தொடர்ந்து கிடைத்து கொண்டிருக்கும். மோசமான விளைவுகள் முடிந்து போய் நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது இனி கவலை வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் முயற்சிகள் அடுத்த ஒரு வருடத்துக்குள் வெற்றியை தந்து சமூக மதிப்பு, நிம்மதி சந்தோஷம் என்று இருக்கும். இந்த குருபெயர்சி உங்களுக்கு நன்மை தருவதாக அமைகிறது.
உடல் ஆரோக்கியம்
கடந்த வருடங்களில் குரு 8ல் இருக்கும்போது அதிக மன உளைச்சல் தேவையில்லாத வைத்திய செலவு என்றும் குடும்ப உறுப்பினர்களின் வைத்திய செலவு என்று சில பல தொந்தரவுகளை சந்தித்திருப்பீர்கள். இந்த குரு பெயர்ச்சியும் பின் வரும் சனி பெயர்ச்சியும் உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கும். குடும்ப உறுப்பினர்களின் நாள்பட்ட வியாதிகள் விரைவில் குணமாகும். கவலை வேண்டாம் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
குடும்பம் மற்றும் உறவுகள் :
கடந்த காலங்களில் இருந்துவந்த விரிசல்கள் பிரச்சனைகள் வழக்குகள் தீர ஆரம்பிக்கும், விலகிய சொந்தங்கள் தேடி வருவார்கள் சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகளால் சந்தோஷம் உண்டாகும். தீராத பிரச்சனை என நினைத்தது எளிதில் தீர்ந்துவிடும். கடந்த வருடம் உத்தியோகம் படிப்பு போன்ற காரணங்களுக்காக குடும்பத்தை பிரிந்து இருந்தால் இந்த குரு பெயர்ச்சி சேர்த்து வைக்கும். பொதுவில் எல்லோரும் உங்களுடன் சந்தோஷமாக இருப்பர் பெரிய பிரச்சனைகள் ஏதும் குடும்பத்தில்வராது. சில விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் :
விருச்சிகத்தில் குரு இருந்தவரை உத்தியோகத்தில் தீராத பிரச்சனைகள் தேவையில்லாத இடமாற்றங்கள் மேலதிகாரி/உடன் வேலை செய்வோரோடு மோதல் அல்லது வேலை இழப்பு பல கஷ்டங்களை சந்தித்த நீங்கள் தனூர் ராசிக்கு குரு பெயரும்போது மகிழ்ச்சி அதிகம் ஆகும், விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் பதவி உயர்வும் உண்டு, இந்த வேலை மகிழ்ச்சி தரவில்லை எனில் புதிய வேலைக்கு முயற்சித்தால் வேலை கிடைக்கும், வெளிநாட்டுக்கு முயற்சி செய்தால் வெளிநாட்டு வேலை கிடைக்கும், அரசு ஊழியர்களுக்கு தாங்கள் விரும்பிய பதவி உயர்வு சம்பளவுயர்வு கிடைக்கும். புதிதாக உத்தியோகம் தேடுவோருக்கு உடனே வேலை கிடைக்கும். வேலையில் சந்தோஷம், நிம்மதியான நிலை உடன் வேலைசெய்வோர் ஆதரவும் மேலதிகாரிகளின் அனுகூலமும் இருந்து கொண்டிருக்கும். இந்த குரு பெயர்ச்சி உத்தியோகஸ்தர்க்கு அனுகூலமான பெயர்ச்சியாகும்.
தொழில் அதிபர்கள்/வியாபாரிகள் :
இனி தொழிலில் ஏற்ற காலம் தான், புதிய தொழில் தொடங்குவோர் அல்லது தொழிலை விஸ்தரிப்பு செய்வோர் நல்ல பயனை பெயர்ச்சி முழுவதும் பெறுவார்கள், தொழிலாளர்களின் ஒத்துழைப்பு, கூட்டாளிகளின் நேர்மை, அரசாங்க அனுகூலம் என்று எல்லாம் நன்றாக இருக்கும். கணக்கு வழக்குகள் சரியாக இருக்கும். பெரிய லாபங்கள் உண்டாகும், தொழில் நிமித்தமாக பிரயாணங்கள் வெற்றியை தரும், கூட்டு தொழிலும் பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் நிறுவனங்களும் நல்ல வளர்ச்சியை பெறும். எதிரிகள் தொல்லை முற்றிலும் நீங்கும்.
அரசியல்வாதிகள் :
காத்திருந்த பதவி தேடிவரும் காலம் இது. தொண்டர்களின் உற்சாகம் ஒத்துழைப்பு அதிகம் இருக்கும், மேலிடத்தில் மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும், வெற்றிகள் குவியும் சமூகத்தில் அந்தஸ்து உயரும், வழக்குகள் தானாக விலகும், எதிரிகள் காணாமல் போவர்.
கலைஞர்கள்:
திரைப்படத்துறை, மீடியா மற்றும் சொந்தமாக தொழில் செய்யும் கலைஞர்கள் நல்ல பல வாய்ப்புகளை பெறுவார்கள் புகழ், பதவி, பட்டங்கள் இவை தேடி வரும். பணப்புழக்கம் தாராளம், விருந்து கேளிக்கைகளுக்கும் குறைவு இருக்காது. புதிய நட்புகள் நன்மை தரும். வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டால் எதிர்காலம் நன்றாக இருக்கும். தசா புக்திகள் சாதகமாய் இருந்தால் அடுத்த சிலவருடங்களுக்கும் இது நீடிக்கும்.
விவசாயிகள் :
விவசாயத்திலும், குடும்பத்திலும் ஏகப்பட்ட செலவுகள் பிரச்சனைகள் வழக்குகள் என்று இருந்த நிலை இனி மாறும், விளைச்சல் அதிகரிக்கும், பணப்பயிர்கள் அதிக லாபம் தரும், புதிய நிலம் வீடு வாங்கும் யோகம் உண்டாகும், தீராத வழக்குகள் முடிவுக்கு வரும், கால்நடைகளால் லாபம் உண்டாகும், குடும்பத்தில் குதூகலம் நிறைந்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
மாணவர்கள் :
கடந்த வருடம் இருந்து வந்த மந்த நிலை மாறி நன்கு படிப்பார்கள், புதிய விருப்ப பாடங்களை எடுத்து படிக்கவும், சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கவும், விரும்பிய கல்லூரி, பாடத்திட்டம் போன்றவையும் நல்ல நண்பர்கள் சேர்க்கையும், விளையாட்டுகளில் வெற்றியும் ஆசிரியரின் மதிப்பும், பெற்றோர்களின் அரவணைப்பும் கிடைத்து சந்தோஷமாக இந்த வருடம் ஓடும். தனிப்பட்ட ஜாதகத்தில் குருவும் புதனும் நன்றாக இருந்தால் நிச்சயம் வெற்றி அதிகம் உண்டாகும். படிப்பில் நல்ல கவனம் இருக்கும்.
பெண்கள் :
அப்பாடா என்று பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள் பலவிதமான தொல்லைகளை இதுவரை அனுபவித்து வந்திருப்பீர்கள், இனி குரு பெயர்ச்சி பல சாதங்களை அள்ளித்தரும், கணவர் மனைவிக்குள் நெருக்கம் அன்பு, குடும்ப அங்கத்தினரிடம் செல்வாக்கு, அக்கம்பக்கத்தாரோடு நட்பு, சமூகத்தில் அந்தஸ்து, தீர்த்த யாத்திரைகள் செல்லுதல், திருமணத்தை எதிர்பார்த்தோருக்கு திருமணம் முடிதல், குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு இந்த வருடம் குழந்தை நிச்சயம் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை விருந்துவிழா கேளிக்கைகள், செல்வம் பெருகுதல், உழைக்கும் மகளிருக்கு பதவி உயர்வு, செல்வாக்கு கூடுதல் புதிய உத்தியோகம் என்று நன்றாகவே இருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் :
மிக நன்றாக இருப்பதால் ராசிநாதன் முருகனையும், பரமேஸ்வரன் அம்பாள் ஆகியோரை வழிபடுவது நலம் தரும் தியானப்பயிற்சி, கந்த சஷ்டி கவசம், சிவ ஸ்லோகங்கள் இவற்றில் ஒன்றைச் சொல்வதும் மற்றும் ஏழை எளியோருக்கு உதவுவது, அன்னதானம் செய்வது போன்றவையும் நலம் தரும்.
குரு பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்…
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM