உத்தரப் பிரதேச மாநிலத்தின் 21வது முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கோரக்பூர் மடத்தின் தலைவர் யோகி ஆதித்யநாத் குறித்து, மதவாத முத்திரையுடன் சிலர் விமர்சனங்களை முன்வைத்தாலும், அவர் மதப் பாகுபாடு காட்டுபவரில்லை என்று கூறுகிறார் இஸ்லாமியர் ஒருவர்.
உத்தர பிரசேத்தில் புகழ்பெற்ற கோரக்நாத் கோயிலில் தொண்டாற்றும் தன்னார்வலர்களில் முகம்மது (30) என்ற முஸ்லிம் இளைஞரும் இடம்பெற்றுள்ளார். இவர், கோயிலின் தலைமைத் துறவியும், உ.பி.முதல்வருமான யோகி ஆதித்யநாத்தின் அன்புக்குரியவராகத் திகழ்கிறார்.
கோரக்நாத் கோயிலை அடுத்து 2 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது ஒரு கோசாலை. இங்கே 500க்கும் மேற் பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பாராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களில் ஒருவர் முகம்மது (30) என்ற இஸ்லாமிய இளைஞர்.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது 10-ம் வயது முதல் இங்கே தொண்டாற்றி வருகிறார். உணவுடன் சிறு தொகை அவருக்கு ஊதியமாகத் தரப்படுகிறது. பசுக்களைக் குளிப்பாட்டுவது, அவற்றுக்கு உணவளிப்பது உள்ளிட்ட பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார்.
தீவிர இந்துத்துவவாதி என்று முத்திரை குத்தப் பட்டு, வெறுப்பு விமர்சனங்களை பலரும் முன்வைக்கும்போது, இது குறித்து கருத்து தெரிவித்தார் முகம்மது.
அவர் கூறிய போது, “குழந்தைப் பருவத்தில் இருந்தே நான் இங்கு இருந்து வருகிறேன். இதுதான் எனது வீடு. என் மீது யோகிஜிக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. எனது வாழ்நாள் முழுவதும் நான் இங்கு இருப்பேன். யோகிஜியை ஒரு மதவாதத் தலைவர் என்று கூறுகிறார்கள். ஆனால், பொதுவாக அவர் வெளியில் வந்துவிட்டால், எவரிடமும் தனிப்பட்ட முறையில் மதப் பாகுபாடெல்லாம் காட்ட மாட்டார். உ.பி., முதல்வராக அவர் அனைத்து சமூகத்தின் வளர்ச்சியையும் உறுதிசெய்வார்” என்றார்.
முகம்மது, இங்கே பசுக்களைப் பராமரித்து வந்தாலும், தொழுகை உள்ளிட்ட இஸ்லாமிய நடைமுறைகளை அவர் வழக்கப்படி பின்பற்றி வருகிறார்.
முகம்மதுவின் தந்தையும் இங்குதான் பணியாற்றினாராம். அவர் தற்போது சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள மகாராஜ் கஞ்ச் நகரில், தனது வீட்டில் வசித்து வருகிறார். முதுமைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மருத்துவச் செலவை, யோகி ஆதித்யநாத்தான் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
கோரக்பூரின் வணிகரான மொகம்மத் காலீம் ஃபாரூகி என்பவர், யோகி ஆதித்யநாத் குறித்து கூறியபோது, “உபி.,யின் முதல்வராக யோகியை தேர்ந்தெடுத்த செயலை வரவேற்கிறோம். அவரது வரவால், கோரக்பூருக்கும், மாநிலம் முழுமைக்குமே ஒரு நல்ல மாற்றம் வரும். அரசு என்பது ஒரு தனிப்பட்ட நபரின் அரசு அல்ல. நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த அரசை தேர்ந்தெடுத்திருக்கிறோம். அவர் நிச்சயமாக மாநிலத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவார் என்று நம்புகிறோம். நாங்கள் இதய பூர்வமாக இதனைக் கூறுகிறோம். இப்போது நாங்கள் எங்குச் சென்றாலும், நாங்கள் முதல்வரின் ஊரில் இருந்து வருகிறோம் என்றே பெருமையுடன் கூறுகிறோம்” என்றார்.
அவரது ஹிந்துத்துவா இமேஜ் குறித்து சிலர் பேசிக் கொண்டிருக்க, உள்ளூரில் உள்ள பலரும் அவரது வளர்ச்சிப் பணிகளைச் சொல்லிச் சொல்லி வாழ்த்துகிறார்கள். எம்.பி.யாக இருந்து கோரக்பூரில் எய்ம்ஸ் கொண்டுவரப் பாடுபட்டதும், ஒரு உரத் தொழிற்சாலையை அமைப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் என!
பெருமளவிலான இஸ்லாமியர்கள், யோகி ஆதித்யநாத் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதை பெரும் மகிழ்ச்சியுடன் இனிப்பு கொடுத்து வரவேற்றுக் கொண்டாடினார்கள். பாஜகவின் அல்பசங்க்யாக் மோர்ச்சாவின் உறுப்பினர் இர்பான் அஹ்மத் என்பவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில், அவர் எங்கள் முதல்வர். அதற்கு மேல் எதையும் நாங்கள் எவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்கப் போவதில்லை. எங்கள் பிரச்னைகள் என்ன என்பது அவருக்குத் தெரியும். அவற்றை விரைவில் அவர் தீர்த்து வைப்பார். நாங்கள் இன்று ஹோலியை அவரது வண்ணத்துடன் சேர்த்துக் கொண்டாடுவோம்” என்றார்.
யோகி ஆதித்யநாத் நடத்தி வரும் ஜுண்டா தர்பாருக்கு வரும் எவரும் வெறும் கையுடன் திரும்பியதில்லை. ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள தனது பெயரைச் சேர்க்க பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்த சௌத்ரி கைஃபுல் வாரக், இதனை பெருமையுடன் கூறுகிறார். இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், “இங்கே யார் வந்தாலும் அவரது வேலை சுலபமாக முடிந்துவிடும். சில நாட்களுக்கு முன், ஆக்கிரமிப்பால் சீரழிந்திருந்த மசூதியின் நிலையை எடுத்துச் சொல்லி, உதவிகேட்க வந்திருந்தோம். அதனை மகராஜ்தான் தீர்த்துவைத்தார்.” என்றார் பெருமையுடன்.
ஜாகிர் அலி வார்ஸி என்பவரும் ஆதித்யநாத் குறித்து பெருமிதத்துடன் கூறினார். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையுடன் இருக்கும் கோரக்பூரின் மான்வேலா கிராமப் பகுதியில், பாஜக 2014 பொதுத் தேர்தல் நேரத்தில் பிரசாரக் கூட்டம் நடத்த இடத்தைக் கொடுத்தார்கள் முஸ்லிம்கள். இதற்கு மோடியின் மீதான மதிப்பு என்பதை விட, ஆதித்யநாத் மீதான நன்றியுணர்வு என்றே சொல்லலாம். கோரக்புர் வளர்ச்சி முகமையின் பிடியில் விரும்பத்தகாத வகையில் வளைக்கப் பட்டிருந்த ஏழை இஸ்லாமியர்களின் பெரும்பாலான நிலங்களை மீட்டுக் கொடுத்தவர் ஆதித்யநாத். 2017 தேர்தலில் அவர் 175 பேரணிகளை இங்கே நடத்தியுள்ளார் என்றார் ஜாஹிர் அலி வார்ஸி.
இன்னும் கோரக்பூர் மட்டுமல்லாது யோகி ஆதித்யநாத்தை நன்கு அறிந்த இஸ்லாமியர்கள் அவரது பதவியேற்பை தங்கள் சொந்த வீட்டு நிகழ்ச்சியைப் போல் கொண்டாடியுள்ளனர் என்று உள்ளூர் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.