நீர் தேர்வு முடிவுகள் வெளியீடு: நீட் வழக்குகளை மாநில நீதிமன்றம் விசாரிக்க வேண்டாம் என்கிறது உச்ச நீதிமன்றம்
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான நீட் மே 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதுவே மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தகுதித் தேர்வாகவும் இருந்தது. இந்தத் தேர்வு குறித்து பலத்த சர்ச்சை எற்பட்டது. இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தில் மாணவர்கள் சிலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற மதுரை நீதிமன்ற கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டது. இதனையடுத்து இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என அனுமதி அளித்தது. மேலும் மதுரை உயர் நீதிமன்றக் கிளை விதித்த தடை உத்தரவை நீக்கியதுடன், நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை மாநில நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை கல்வியாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
உச்ச நீதிமன்ற அனுமதி அளித்துள்ளதை அடுத்து நீட் தேர்வு முடிவுகள் நாடுமுழுவதும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. cbseresults.nic.in மற்றும் cbseneet.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களது கட்-ஆப் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.