spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபட்டயக் கணக்காளர் கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்த மோடியின் முழுமையான உரை

பட்டயக் கணக்காளர் கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்த மோடியின் முழுமையான உரை

- Advertisement -

சென்னை:
ஜூலை 1 ஆம் தேதி, ஜிஎஸ்டி அறிமுகப் படுத்தப் பட்ட நாளில், பட்டயக் கணக்காளர் கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்து பிரதமர் மோடி ஆற்றிய முழுமையான உரையின் தமிழ் வடிவம் இது. சென்னை வானொலியில் ஒலிபரப்பான வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையில் இருந்து….

வணக்கம்!

Institute of Chartered Accountant of India ICAIயின் தலைவர் நிலேஷ் விக்ரம்சே அவர்களே, நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி அவர்களே, மத்திய அரசு அமைச்சரவையின் எனது அனைத்து சக அமைச்சர்களே! நாடுமுழுவதிலும் சுமார் 200 இடங்களில் இருக்கும் பட்டயக் கணக்காளர்கள் துறையைச் சார்ந்த அனைத்து பெரியோர்களே, மாநிலங்களின் மதிப்பிற்குரிய முதல்வர்களே, தில்லியின் இந்த மழையைப் பொருட்படுத்தாது, உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் இருக்கும் உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.

இன்றைய மங்கலமான தருணத்தில் பலருக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று இந்த அரங்கில் நிறைந்திருப்பவர்களே, தொழில்துறையோடும் வணிகத்தோடும் தொடர்புடைய பெரியோரே, நாட்டின் பல்வேறு இடங்களிலும், தொலைக்காட்சியிலும் வானொலியிலும் பார்க்கவும் கேட்கவும் பெருந்திரளாக திரண்டிருக்கும் என் நாட்டு மக்களே, இளைய நண்பர்களே, சகோதர சகோதரிகளே.

இன்று Institute of Chartered Accountants of India, ICAIயின் நிறுவன நாள். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். இன்று உங்கள் நிறுவன நாள், பாரதத்தின் நிதித் துறை ஒரு புதிய பாதையில் பயணிக்கும் ஒரு புதிய தொடக்கம் என்பது எத்தனை சுபமான தற்செயல் நிகழ்வு! இன்றிலிருந்து தான் பாரதத்தில் ஜி.எஸ்.டி. அதாவது சரக்கு மற்றும் சேவை வரியின் தொடக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த வரலாற்றுரீதியிலான சந்தர்ப்பத்தில் நான் உங்கள் மத்தியில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எனக்கு பெரும்பேறு அளிப்பது. இளைஞர்களே, பட்டயக்கணக்காளர் துறையோடு பல்லாண்டுகளாக இணைந்திருக்கும் அனைத்து பெரியோர்களே, உங்கள் அனைவருக்கும் நாடாளுமன்றம் ஒரு புனிதமான அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. அது கணக்குவழக்குகளில் சரியை சரி என்றும், தவறை தவறு என்றும் சான்றளிக்கும் அதிகாரம், தணிக்கை செய்யும் அதிகாரம், இது உங்களிடம் மட்டுமே இருக்கிறது. எப்படி ஒரு மருத்துவர் சமுதாயம் மற்றும் தனிமனிதனின் உடல் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்துகிறாரோ, அதே போல உங்கள் மீது சமூகத்தின் பொருளாதார ஆரோக்கியத்தின் பொறுப்பு இருக்கிறது. நீங்கள் எதை வேண்டுமானாலும் உண்ணுங்கள், எதைப் பற்றியும் கவலையே படாமல், எப்படி வேண்டுமானாலும் இருங்கள், ஏனென்றால் நீங்கள் நோய்வாய்ப்பட்டால் என் வருமானம் அதிகரிக்கும் என்று எந்த மருத்துவரும் கூற மாட்டார். மாறாக, ஒரு மருத்துவர் நீங்கள் உடல்நலத்தோடு இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையே கூறுவார். என் நண்பர்களே, சமுதாயத்தின் பொருளாதார அமைப்புக்கள் நலத்தோடு இருக்கவும், அவற்றில் தவறான கூறுகள் நுழைந்து விடாமல் இருக்கவும் நீங்கள் தான் கவனம் எடுத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் தேசத்தின் பொருளாதாரத்தின் பெரிய தூண்கள் என்பதால், உங்கள் இடையே இருப்பது எனக்கு ஒரு கற்றல் மட்டுமல்ல தொடக்கமும் கூட. உலகெங்கிலும் பாரதத்தின் பட்டயக்கணக்காளர்கள், அவர்கள் புத்திகூர்மைக்காகவும், சிறப்பான நிதித் திறன்களுக்காகப் போற்றப்படுகிறார்கள். இன்று புதிய பட்டயக்கணக்காளர் படிப்புப் பாடத்திட்டம் ஒன்றைத் தொடக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இது தான் உங்கள் சக்தி வாய்ந்த படிப்பு மற்றும் உங்கள் தேர்வுகளின் நம்பகத்தன்மைக்குமான அடையாளம்.

இந்த புதிய படிப்பு, இந்தப் பணிக்கு வரும் புதியவர்களின் நிதிசார் திறன்களை மேலும் வலுவுள்ளதாக ஆக்கும் என்று நான் நம்புகிறேன். நமது அமைப்புகளிலும், மனிதவள மேம்பாட்டிலும், உலக அளவிலான தரநிலை, உலக அளவிலான தேவை ஆகியவற்றுக்கு ஏற்ப, நமது மனித வளங்களை மேம்படுத்தும் திசையில் நாம் தொடர்ந்து இடைவிடாது முன்னேற்றம் காண வேண்டும். நமது படிப்புக்களில் கணக்காளர் துறையில் தொழில்நுட்பக் கூறுகளை எப்படி புகுத்தலாம், நமது பட்டய நடுநிலை நிறுவனங்கள் தொழில்நுட்பரீதியாக என்ன புதுமைகளைச் செய்யலாம், கணக்காளர் துறையில் புதுமைகள், புதிய புதிய மென்பொருள் வடிவமைத்தல் என, இவற்றுக்கெல்லாம் ஒரு பெரிய சந்தை உங்களுக்காகக் காத்திருக்கிறது.

நண்பர்களே, நமது புனித நூல்களில் 4 நற்கூறுகள் பற்றிப் பேசப்பட்டிருக்கின்றன. நமது சாத்திரங்கள் 4 நற்கூறுகள் பற்றிப் பேசுகின்றன. அறம், பொருள், இன்பம், வீடு. நாம் அறத்தையும் வீடுபேற்றையும் பற்றிப் பேசும் போது நமது ரிஷிமுனிகள் நம் கண்முன்னே நிற்கிறார்கள். அவர்களுக்கு இணையாக பொருளாதார உலகின் செயல்பாடுகள் உங்கள் கைத்தலத்தில் இருக்கின்றன. அவற்றுக்கு இணையாக இருக்கின்றன. அந்த வகையில் நான் உங்களை பொருளாதார உலகின் ரிஷிமுனிகள் என்றால், அதில் தவறில்லையே!! வீடுபேறு அடையும் பாதையைக் காட்டும் ரிஷிமுனிகளுக்கு எத்தனை முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவு மகத்துவம், மனித வாழ்வில் பொருளாதார அமைப்பில் உங்கள் வழிகாட்டுதலிலும் இருக்கிறது. பொருளின் சரியான பயன்பாடு என்ன, எது சரியான வழி? இந்தப் பாதையைத் துலக்கிக் காட்டும் பொறுப்பு பட்டயக் கணக்காளர் துறையின் ஒவ்வொரு நபருக்கும் இருக்கிறது.

எனது பிரியமான நண்பர்களே, நீங்கள் என்மீது பொழியும் நேசம், நீங்கள் எனக்கு அளிக்கும் நம்பிக்கை, உங்களின்…. உங்களின் பாசம், இதுதான் மனம் திறந்து பேசும் ஊக்கத்தை எனக்கு அளிக்கிறது. நம் அனைவரின் தேசபக்தியில் எந்தக் குறைவும் இல்லை. எந்த அளவுக்கு நான் தேசத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேனோ, அதே அளவு நீங்களும் தேசத்தை முன்னேற்ற நினைக்கிறீர்கள். ஆனால் சில உண்மைகளைக் கூற விரும்புகிறேன். சில வேளைகளில் இது என் சிந்தனையைத் தூண்டி விடுகிறது. யார் வீட்டிலாவது தீப்பற்றிக் கொண்டால், அவரது சொத்து முழுக்கவும் சாம்பலாகிப் போனால், அந்தக் குடும்பம் தன் சொந்த முயற்சியின் துணை கொண்டு மீண்டும் நல்லநிலைக்கு வரும் என்பதை நீங்கள் சில அனுபவசாலிகள் கூறக் கேட்டிருக்கலாம். சில வேளைகளில் கஷ்டங்களைச் சந்திக்க நேரலாம் ஆனால், அவர்கள் மீண்டும் தெம்போடு தங்கள் பணிகளை ஆற்றத் தொடங்கி விடுவார்கள். காலப்போக்கில் அவர்கள் தங்கள் கஷ்டங்களிலிருந்து எல்லாம் மீட்சி பெறுவார்கள். வீட்டில் தீப்பற்றிக் கொண்டால், வீட்டை எப்படி மீள் உருவாக்க வேண்டும் என்பதைக் குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்று நமது பெரியோர்கள் கூறுவார்கள். ஆனால், குடும்பத்தில் இருக்கும் ஒரு உறுப்பினருக்கு களவாடும் பழக்கம் இருந்தால், அந்தக் குடும்பம் என்றுமே மீட்சி அடையாது. சகோதர சகோதரிகளே ஒட்டுமொத்த குடும்பமும் களவில் ஈடுபடாது தான். குடும்பத்தில் ஒன்றிரண்டு உறுப்பினர்கள் குடும்பத்தின் கட்டுப்பாடுகளை ஆங்காங்கே தகர்த்துத் தவறிழைத்தால், ஒட்டுமொத்த குடும்பமும் நாசமாகி விடும்.

கணக்குகளைச் சரிபார்க்கும் என் நண்பர்களே, இப்படித்தான் எந்த ஒரு தேசமும் பெரிய இடர்களிலிருந்து தானே மீண்டு எழுகிறது. அது வெள்ளமாகட்டும், நிலநடுக்கமாகட்டும், எந்த ஒரு இடராகட்டும், தேசத்தின் மக்களிடம் வல்லமை இருக்கிறது, மக்களனைவரும் இணைந்து சங்கடத்திலிருந்து வெளியே வருகிறார்கள், ஆனால் அதே தேசத்தில் களவாடும் பழக்கம் சிலரிடம் ஏற்பட்டு விடுமேயானால், எப்படி குடும்பங்களால் மீட்சி பெற முடியாதோ, அதே போல அந்த தேசமோ, சமுதாயமோ மீண்டெழ முடியாது. அனைத்துக் கனவுகளும் தகர்ந்து போகும், வளர்ச்சி தடைப்பட்டுப் போகும். சிலர் தான் இந்த வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக அரசு கடந்த 3 ஆண்டுகளாக மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. புதிய சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன, பழைய சட்டங்கள் மேலும் கடுமையானவையாக ஆக்கப்பட்டிருக்கின்றன. பல நாடுகளுடன் நாம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம். நாம் ஏற்படுத்திக் கொண்ட பழைய ஒப்பந்தங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். அயல்நாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன என்பதற்கு, ஸ்விஸ் வங்கிகளின் அண்மைக்காலத்திய புள்ளிவிவரங்களே சான்று பகர்கின்றன.

இந்தியர்கள் சேமித்து வைத்திருக்கும் பணம், மிகக்குறைவான அளவை எட்டியிருக்கிறது என்று ஸ்விஸ் வங்கியின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பணத்தை சேமித்திருக்கிறார்கள் என்று 30 ஆண்டுகள் முன்பாக 1987ஆம் ஆண்டில் ஸ்விஸ் வங்கிகள் வெளியிடத் தொடங்கின. கடந்த ஆண்டு வெளியான அறிக்கையின்படி, இந்தியர்கள் சேமித்து வைத்திருக்கும் பணம், அது பழையதாகட்டும், புதியதாகட்டும், இதில் 45 சதவீத வீழ்ச்சி காணப்பட்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு நீங்கள் என்னிடத்தில் பணியை ஒப்படைத்தீர்கள், அப்போதிலிருந்தே, 2014ஆம் ஆண்டு தொடங்கி வீழ்ச்சிப் பயணம் தொடங்கி விட்டது. அது மேலும் வேகமடைந்திருக்கிறது. 42 சதவீத அதிகரிப்பு இருந்ததாக, 2013ஆம் ஆண்டு ஸ்விஸ் வங்கிகளின் ஆவணங்கள் தெரிவிப்பது உங்களுக்கு துக்கத்தையும் அளிக்கலாம், ஆச்சரியத்தையும் அளிக்கலாம். 42 சதவீதம் அதிகரிப்பு இருந்தது. சகோதர சகோதரிகளே, இன்றிலிருந்து 2 ஆண்டுகள் கழித்து, ஸ்விட்ஸர்லாந்திலிருந்து உடனுக்குடன் தரவுகள் கிடைக்கத் தொடங்கும் போது, அயல்நாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைப்போர்களுக்கு மேலும் சங்கடங்கள் ஏற்படப் போகின்றன. உங்களிடம் அப்படிப்பட்ட வாடிக்கையாளர் யாரும் இருக்க மாட்டார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உங்கள் மீது எனக்கு நேசம் அதிகம் இருப்பதால், நான் உங்கள் காதுகளில் கூறுவதை அவர்கள் காதுகளில் போட்டு விடுங்கள்.

நண்பர்களே, தேசத்தில் ஒரு புறத்தில் நான் தூய்மைப்பணியை மேற்கொண்டு வருகிறேன் என்றால், இன்னொரு புறத்தில், பொருளாதார அமைப்பில் தூய்மை இயக்கத்தை நடத்திக் கொண்டு வருகிறேன். இந்த தேசத்தில் நவம்பர் மாதம் 8ஆம் தேதி பற்றி அதிகம் நினைவிருக்கும். நாணயரத்து முடிவும் கூட கருப்புப்பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய படியாக இருந்தது. நான் கேள்விப்பட்டது… சரியா தவறா தெரியவில்லை, நீங்கள் அறிவீர்கள். நவம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு உங்கள் வேலைப்பளு கூடிவிட்டது என்று நான் கேள்விப்பட்டேன். நீங்கள் எத்தனை வேலை செய்ய வேண்டியிருந்தது, எத்தனை வேலை செய்ய வேண்டியிருந்தது என்றால், இது போன்று உங்கள் ஒட்டுமொத்த தொழில்வாழ்வில் செய்யும் வாய்ப்பே கிட்டாத அளவுக்கு செய்ய வேண்டி இருந்தது. பல பட்டயக் கணக்காளர்கள் தீபாவளி விடுமுறையைக் கழிக்கச் சென்றிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ஹோட்டல் புக் செய்து, பணமும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அனைத்தையும் ரத்து செய்து திரும்ப வேண்டியிருந்திருக்கிறது. சில பட்டயக் கணக்காளர்களின் அலுவலகங்கள் பல இரவுகள் தொடர்ந்து பணியாற்றியதாகக் கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் திரும்பி வந்த பிறகு என்ன வேலை செய்தீர்கள் என்பது எல்லாம் எனக்குத் தெரியாது. சரியாகச் செய்தீர்களா, தவறு செய்தீர்களா, தேசத்துக்காகச் செய்தீர்களா உங்கள் வாடிக்கையாளருக்காகச் செய்தீர்களா தெரியாது. ஆனால் கண்டிப்பாகச் செய்தீர்கள்.

நண்பர்களே, கருப்புப் பணத்திற்கு எதிரான இந்தத் தூய்மை இயக்கம் பற்றி, நான் முதன்முறையாக உங்களோடு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் உங்களுக்கு இந்த விஷயத்தின் மகத்துவம் நன்கு புரியும். வங்கிகளில் போடப்பட்டிருந்த பணம் பற்றிய தரவுகளை அலசி ஆராய மிகப் பெரியதொரு அமைப்பை அரசு ஏற்படுத்தியிருந்தது. தொடர்ச்சியாக தரவுகள் தோண்டித் துருவப்படுகின்றன. எங்கிருந்து பணம் வந்தது, எங்கு வைப்பு வைக்கப்பட்டது, எப்படி செய்யப்பட்டது, நவம்பர் மாதம் 8ஆம் தேதிக்குப் பிறகு என்ன என்ன ஆனது என பல விஷயங்கள் அலசப்பட்டு வருகின்றன. இந்தத் தரவுகளின் ஆய்வு தொடர்பாக நாங்கள் இதுவரை யாரையும் பிடித்து விசாரிக்கவில்லை. புள்ளிவிவரங்களை மட்டும் ஆராய்ந்து வருகிறோம். எனதருமை நண்பர்களே, உங்களின் தேசபக்தி என்னுடைய தேசபக்தியை விட சற்றும் குறைந்தது அல்ல என்று நான் முன்பேயே கூறியிருந்தேன். ஆனால் நான் இன்று முதன்முறையாக இந்த அனைத்து விஷயங்களையும் உங்கள் முன்பு தெரிவிக்க விரும்புகிறேன். இதைக் கேட்டு நாடே திகைத்துப் போகும். 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் அனைத்துக் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களும் சந்தேகச் சுற்றுக்குள் வந்திருக்கின்றன. சந்தேகத்திற்குரிய அவற்றின் நடவடிக்கைகள் வினாக்களை எழுப்புகின்றன. நாங்கள் ஓரளவு தான் தோண்டித் துருவி இருக்கிறோம், கணிசமான பகுதி இன்னும் பாக்கி இருக்கிறது.

இந்த 3 இலட்சம் இன்னும் எந்த அளவு அதிகரிக்கும் என்று என்னால் கூற முடியாது. இவற்றை ஆய்வு செய்யும் போது சில விஷயங்கள் தீவிரமானதாகத் தெரிகிறது. நான் கூறவிருக்கும் ஒரு விஷயத்திலிருந்து, இந்த அரசின் எண்ணப்பாடு என்ன, அரசியல்வாதிகளின் முனைப்பு என்ன என்பது பற்றி உங்களுக்குத் தெரிய வரும். ஒருபுறம் ஒட்டுமொத்த அரசு, ஒட்டுமொத்த ஊடகத்துறை, வியாபாரிகள் உலகம் என அனைவரின் கவனமும் 30ஆம் தேதி இரவு 12 மணிக்கு என்னவாகும் என்பதன் மீது படிந்திருந்தது. ஜூலை மாதம் 1ஆம் தேதி என்ன ஆகும் என்பதே எண்ணமாக இருந்தது. 48 மணி நேரம் முன்பாக ஒரு இலட்சம் நிறுவனங்களை, பேனாவின் துணை கொண்டு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். நிறுவனங்களின் பதிவாளர் ஏட்டிலிருந்து அவற்றின் பெயர்கள் அகற்றப்பட்டு விட்டன. இது சாதாரணதொரு முடிவல்ல நண்பர்களே, அரசியல் கணக்கு பார்ப்பவர்கள் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க மாட்டார்கள். தேசநலனுக்காகவே வாழ்பவர்களால் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்க முடியும். ஒரே ஒரு கையெழுத்தால் ஒரு இலட்சம் நிறுவனங்களை முடிவுக்குக் கொண்டு வரும் சக்தி, தேசபக்தி அளிக்கும் ஊக்கத்திலிருந்தே பிறக்கிறது. யார் ஏழைகளைச் சுரண்டினார்களோ, அவர்கள் சுரண்டியதை ஏழைகளுக்குத் திரும்பக் கொடுத்தாக வேண்டும்.

இதைத் தவிர, அரசு மேலும் 37000, 38000த்திற்கும் அதிகமான நிறுவனங்களை அடையாளம் கண்டிருக்கிறது. கருப்புப் பணத்தைப் பதுக்குதல், ஹவாலாவில் ஈடுபடுதல், வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக மிகக் கடுமையான செயல்பாடுகளை முடுக்கி விடும் முயற்சிகள் நடைபெறும். கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றான போலி நிறுவனங்களுக்கு முடிவு கட்டுவதில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எத்தனை பாதிப்பு ஏற்படும் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் தேசத்தின் பொருட்டு யாராவது முடிவு எடுத்துத் தானே ஆக வேண்டும்.

பட்டயக்கணக்காளர்கள் துறையிலிருக்கும் எனது நண்பர்களே, நான் இன்று உங்கள் நிறுவன நாளன்று உங்களிடையே வந்திருக்கிறேன். நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். கணக்கை சரி செய்யும் வல்லமை உங்கள் கைகளில் இருக்கிறது. நாணயவிலக்கலுக்குப் பிறகு, யாராவது இது போன்ற நிறுவனங்களுக்கு உதவியவர்கள் இருப்பார்கள் இல்லையா? இந்த கொள்ளைக்கார நிறுவனங்கள், ஏதாவது ஒரு பொருளாதார மருத்துவரிடம் கண்டிப்பாகச் சென்றிருக்கும் இல்லையா? யாரிடம் சென்றார்கள் என்பதை அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். யாரெல்லாம் இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு வழிகாட்டினார்களோ, யாரெல்லாம் இவர்களுக்குத் துணை நின்றார்களோ, யாரெல்லாம் இவர்கள் கைபிடித்தார்களோ, உங்களில் அப்படிப்பட்டவர்களை அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது இல்லையா? அவர்களைத் தள்ளி வைக்க வேண்டிய தேவை இருக்கிறது இல்லையா? நமது தேசத்தில் 2 இலட்சம் 72000த்திற்கும் அதிகமான பட்டயக் கணக்காளர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உங்களுடன் articled assistants, உதவியாளராக நியமிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் சுமார் 2 இலட்சம் இருக்கிறது. பட்டயக் கணக்காளர்கள், உதவியாளர்கள், உங்களிடம் பணியாற்றும் பணியாளர்கள் என அனைவரையும் இணைத்தால் இந்த எண்ணிக்கை 8 இலட்சத்தையும் விடக் கூடுதல். உங்கள் குடும்பம், இந்தத் துறையின் குடும்பம் 8 இலட்சத்துக்கும் மேற்பட்டது, அதாவது உங்கள் தொழிலில் மட்டும். நான் இப்போது உங்கள் முன்பு இன்னொரு தரவை வைக்கிறேன், ஏனென்றால் புள்ளிவிவரங்களைப் புரிந்து கொள்வதில் நீங்கள் வல்லவர்கள், புரியும்படி கூறுகிறேன்.

நமது தேசத்தில் 2 கோடிக்கும் அதிகமான பொறியாளர்களும் மேலாண்மைப் பட்டதாரிகளும் இருக்கிறார்கள் என்று அனுமானிக்கப்படுகிறது. 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதாவது தலைசிறந்த தொழில் என்று எது கருதப்படுகிறதோ, எதற்கு அதிக மதிப்பளிக்கப்படுகிறதோ அதில். அப்படிப்பட்டவர்கள் எண்ணிக்கை நமது தேசத்தில் கோடிக்கணக்கில் இருக்கிறது. தேசத்தின் அனைத்து நகரங்களிலும் கட்டப்பட்டிருக்கும் பிரும்மாண்டமான வீடுகளையும் இதோடு இணைத்தால், அவர்களின் எண்ணிக்கை பல கோடிக்கணக்கில் இருக்கிறது. இது மட்டுமல்ல மேலும் ஒரு புள்ளிவிவரப்படி, கடந்த ஆண்டு பாரதத்திலிருந்து அயல்நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாகத் தங்கள் உல்லாசப் பயணத்தை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடி 18 இலட்சம் பேர்கள். இவற்றை எல்லாம் தாண்டி, நமது தேசத்தில் வெறும், வெறும் 32 இலட்சம் பேர்களே, தங்கள் வருமானம் 10 இலட்சத்திற்கும் அதிகமானது என்று தெரிவித்திருக்கிறார்கள் என்பது இப்போது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம். உங்களில் யாருக்காவது இதில் நம்பிக்கை ஏற்படுகிறதா? ஏற்படுகிறதா கூறுங்கள். கணக்கை சரிபார்க்கும் நண்பர்களே, நான் உங்களிடம் தான் கேட்கிறேன். தேசத்தில் 32 இலட்சம் பேர்களுக்கு மட்டும் தான் 10 இலட்சத்துக்கும் அதிகமான வருமானம் இருக்கிறதா கூறுங்கள்?

எனது பிரியமான நண்பர்களே, தேசத்தின் கசப்பான உண்மை இது தான். தேசத்தில் வெறும் 32 இலட்சம் பேர்கள் தான் தங்கள் வருமானம் 10 இலட்சத்துக்கும் அதிகம் என்று இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கு நிலையான வருமானம் இருக்கிறது, தனியார் நிறுவனங்கள் சம்பளம் அளிக்கின்றன, அரசிடமிருந்து சம்பளம் வருகிறது என்று நான் புரிந்து கொள்கிறேன். இதைத் தவிர தேசத்தில் என்ன நிலை நிலவுகிறது. சகோதர சகோதரிகளே, நான் புள்ளிவிவரங்களை மேலும் ஆராய விரும்பவில்லை. தேசத்தில் பலகோடி வண்டிகள், ஒவ்வொரு ஆண்டும் வாங்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். இருந்தாலும், நாட்டின் நிதியாதாரத்தை வளப்படுத்த தங்கள் பொறுப்புக்களை புறக்கணிப்பது மிகவும் கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.

நான் புள்ளி விவரங்களை விடுத்து உங்களிடம் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன். நமது CA சகோதரர்களே, ஒரு தனிநபராகட்டும், வாடிக்கையாளராகட்டும், ஒட்டுமொத்த சூழலும் ஆக்கபூர்வமானதாக இருக்கும் போது தான் வரி செலுத்துவார்; நீங்கள் அவர்களை நாணயமான முறையில் வரி செலுத்த ஊக்கப்படுத்துங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். தனக்கு ஆலோசனை அளிப்பவர் உண்மையை மறைக்கச் சொல்லுகிறார் என்றால், அவர் தவறான பாதையில் செல்ல அஞ்சவே மாட்டார். ஆகையால் தான் தவறான ஆலோசனை அளிப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மிக அவசியமான ஒன்றாகும். இதற்காக நீங்களும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும். CA என்ற அமைப்பில் நீங்கள் தான் மனிதவள மேம்பாட்டுப் பணியை செய்கிறீர்கள், பாடத்திட்டத்தை நீங்கள் தான் உருவாக்குகிறீர்கள், தேர்வுகளை நீங்கள் தான் நடத்துகிறீர்கள், விதிமுறைகள் நீங்கள் தான் அமைக்கிறீர்கள், தவறிழைப்பவர்களுக்குத் தண்டனையும் உங்கள் அமைப்புத் தான் அளிக்கிறது. பாரதத்தின் மக்களாட்சி ஆலயமான, 125 கோடி நாட்டுமக்களின் நாடாளுமன்றம் உங்களுக்கு இத்தனை அதிகாரங்களை வழங்கி இருக்கிறது என்ற நிலையில், கடந்த 11 ஆண்டுகளில் வெறும் 25 பட்டயக் கணக்காளர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன எனும் போது கேள்வி எழுகிறது. வெறும் 25 பேர்கள் தான் தவறு செய்திருக்கிறார்களா? உங்களிடம் 1400க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று நான் கேள்விப்படுகிறேன்.

ஒவ்வொரு வழக்கும் முடிவுக்கு வருவதற்கு உள்ளாக பல ஆண்டுகள் உருண்டோடி விடுகின்றன. இத்தனை உயர்தர தொழில்வல்லுனர்களான உங்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இது இருக்கவில்லையா, கூறுங்கள் நண்பர்களே? சகோதர சகோதரிகளே, தேசத்தின் சுதந்திரப் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த சுதந்திரப் போராட்டக் களத்தில் பல இளைஞர்கள் தூக்குக் கயிற்றை இன்முகத்தோடு முத்தமிட்டனர். தேசத்தின் பல மஹாபுருஷர்கள் தங்கள் இளமையை சிறைச்சாலைகளில் தொலைத்தார்கள். தேசத்தின் சுதந்திரத்திற்காக, அந்தக் காலகட்டத்தில் தேசத்தின் பல தொழில்வல்லுனர்கள் மனமுவந்து சுதந்திர வேள்வியில் பங்கெடுத்தார்கள். போராட்டத்தின் தலைமையை இந்த தொழில் வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வழக்குரைஞர்கள். வக்கீல்கள், பேரிஸ்டர்கள் இருந்தார்கள், இவர்கள் பெரும் எண்ணிக்கையில் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்கள்.

அவர்களுக்குச் சட்ட அறிவு இருந்தது. சட்டத்திற்கு எதிராக, சட்ட அறிவு இருந்தும், சட்டத்திற்கு எதிராகப் போராடுவதற்கு என்ன தண்டனை என்பது அவர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்தக் காலகட்டத்தில் நன்கு தொழில் நடத்திக் கொண்டிருந்த பல வக்கீல்கள், தங்கள் தொழிலைத் துறந்து, இந்த தேசத்திற்காக தாமாகவே முன்வந்தார்கள். காந்தியடிகள், சர்தார் படேல், டா. அம்பேட்கர், ஜவஹர்லால் நேரு, சி. ராஜகோபாலாச்சாரியார், மஹேஷ்சந்த்ர சௌத்ரி, தேசபந்து சித்தரஞ்ஜன் தாஸ், சைஃபுத்தீன் கிச்லு, பூலாபாய் தேசாய், லாலா லாஜ்பத் ராய், தேஜ் பஹாதுர் சப்ரூ, ஆஸஃப் அலி, கோவிந்த் வல்லப் பந்த், கைலாஷ்நாத் காட்ஜூ எனத் தங்கள் வாழ்கையைத் தியாகம் செய்தவர்கள் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் வழக்குரைஞர்களாக இருந்தவர்கள். தேசபக்தியால் உந்தப்பட்டு, தேசத்தின் விடுதலை பொருட்டு தங்கள் இளமையைத் தொலைத்தார்கள். இவர்களில் பல தலைவர்கள், தேசத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் முக்கியமான பங்கு வகித்தவர்கள். சகோதர சகோதரிகளே, இந்த மஹாபுருஷர்கள் இடம்பெறாத வரலாறு முழுமை அடையாது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

நண்பர்களே, இன்று நமது தேசத்தின், நமது தேசத்தின் வரலாற்றின் ஒரு மிக முக்கியமான மைல்கல். 1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தேசத்தின் அரசியல்ரீதியிலான ஒருங்கிணைப்புக்குப் பின்னர் இன்று நாடு பொருளாதாரரீதியிலான ஒரு புதிய பயணத்தைத் தொடங்கி இருக்கிறது. இந்த 2017ஆம் ஆண்டில் ஒரு இலக்கு, ஒரு வரி, ஒரு சந்தை என்ற கனவு நனவாகி இருக்கிறது. ஒரு வரலாற்றுக் கணத்தில், மிக முக்கியமான பங்களிப்பு பட்டயக் கணக்காளர்களுடையதாக இருக்கிறது. நீங்கள் என் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள், நண்பர்களே, சுதந்திரப் போராட்டத்தில் வழக்குரைஞர்கள் உலகைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம், அதன் உரிமைகளைப் பெற்றுத் தருவதில் தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்தார்கள். இன்று அந்த காலகட்டத்தைப் போல உங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கோரவில்லை.

நீங்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னே காலம் கழிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தேசம் உங்களுடையது, இந்த தேசத்தின் வருங்காலம், உங்கள் சந்ததிகளுடையதும் கூட. ஆகையால் சுதந்திரப் போராட்டத்தில் வழக்குரைஞர்கள் ஏற்ற தலைமையை, இந்தப் புதிய பயணத்தில் நீங்கள் ஏற்க வேண்டும் என்று கோருகிறேன். இன்று பொருளாதார வளர்ச்சியின் தலைமை தாங்க, எனது பட்டயக் கணக்காளர்கள் படை முன்வர வேண்டும். உங்களை விடச் சிறப்பாக பொருளாதாரத் துறையின் சிகரங்களை எட்டும் பாதையை வேறு யாராலும் வலுப்படுத்த முடியாது. கருப்புப் பணத்தை ஒழித்துக் கட்டவும், ஊழலை முடிவுக்குக் கொண்டு வரவும், உங்கள் வாடிக்கையாளர்களை, நான் மீண்டும் கூறுகிறேன், உங்கள் வாடிக்கையாளர்களை நேர்மையான வழியில் கொண்டு செல்ல, நீங்கள் தான் தலைமை ஏற்க வேண்டும்.

நண்பர்களே, பட்டயக் கணக்காளர்கள் தாம் தேசத்தின் பொருளாதார அமைப்பின் நம்பகத்தன்மை மிகுந்த தூதர்கள். அரசு, வரி செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையே interface, இடைமுகப் பணியை நீங்கள் தான் ஆற்றுகிறீர்கள். உங்கள் கையொப்பத்திற்கு இருக்கும் சக்தி, தேசத்தின் பிரதமரிடம் கூட இருப்பதில்லை; ஒரு பட்டயக் கணக்காளரின் கையொப்பத்திற்கு அத்தனை வல்லமை இருக்கிறது. உங்கள் கையொப்பம் சத்தியத்தின் நம்பிக்கைக்கான அத்தாட்சி. நிறுவனம் சிறியதாகட்டும், பெரியதாகட்டும், நீங்கள் எந்த கணக்கின் மீது கையொப்பம் இடுகிறீர்களோ, அதன் மீது அரசும் நம்பிக்கை வைக்கிறது, தேசத்தின் மக்களும் இந்தக் கணக்குடன், அந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குடன், இருப்புநிலைக்குறிப்புடன் உங்களையும் இணைக்கிறது. இந்தக் கணக்கை, அந்த நிறுவனத்தின் கணக்கு வழக்கை, அதன் இருப்புநிலைக்குறிப்பைப் பார்த்து, கோப்பு அங்கே நிலுவையில் இருப்பதில்லை நண்பர்களே. அந்தக் கையொப்பத்திற்குப் பிறகு ஒரு புதிய வாழ்க்கை தொடங்கி விடுகிறது நண்பர்களே.

இன்று உங்களுக்கு அந்தப் புதிய வாழ்க்கை பற்றிய காட்சியை உங்களுக்குக் காட்டவே நான் வந்திருக்கிறேன். நீங்கள் அந்த நிறுவனத்தின் கணக்கின் மீது கையொப்பம் இட்டு விட்டீர்கள், இருப்புநிலைக்குறிப்பின் மீது கையொப்பம் வைத்து விட்டீர்கள், அரசு அதிகாரிகளும் அதை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். நிறுவனம் நன்கு தழைத்து, வளர்ச்சி கண்டு வருகிறது, நீங்களும் முன்னேற்றம் அடைந்து வருகிறீர்கள். விஷயம் இதோடு நின்று போவதில்லை நண்பர்களே. நீங்கள் அந்த நிறுவனத்தின் கணக்கை சரிசெய்து விடுகிறீர்கள், நிறுவனம் பற்றிய விபரங்கள் மக்கள் முன்னே வருகின்றன. அப்போது அதில் யாரோ ஒரு முதியவர் mutual fundஇல், கூட்டுநிதியில் தனது ஓய்வூதியத் தொகையை முதலீடு செய்கிறார், யாரோ ஒரு ஏழை விதவை தனது மாதச் சேமிப்பை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார் என்று எண்ணிக் கொள்ளுங்கள். ஒரு நிறுவனம் பற்றிய சரியான அறிக்கை அளிக்கப்படாமல், உண்மைகள் மறைக்கப்பட்டு, பிறகு உண்மை வெளிப்படும் போது, உண்மையில் நிறுவனம் மூழ்குவதில்லை நண்பர்களே, ஏழை விதவையின் வாழ்க்கை மூழ்கிப் போகிறது. அந்த முதியவரின் வாழ்கை நாசமாகிப் போகிறது. அவர் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையின் சம்பாத்தியத்தை, உங்களின் ஒரே ஒரு கையொப்பத்தின் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்திருந்தார். ஆகையால் நான் உங்களிடம் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் அனைவரிடம் எனது விண்ணப்பம், இந்தியாவின் 125 கோடி நாட்டுமக்களுக்கும் உங்கள் கையொப்பம் மீது நம்பிக்கை இருக்கிறது.

அந்த நம்பிக்கை எக்காலத்திலும் தகர்ந்து போக விடாதீர்கள். அதில் ஒரு சின்ன சிராய்ப்புக் கூட ஏற்படுத்த அனுமதிக்காதீர்கள். உங்கள் மனக்கோயிலில், இந்த நம்பிக்கை உடைந்திருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால், அதை மீண்டும் மீட்டெடுக்க முன்வாருங்கள், தன்முனைப்போடு ஈடுபடுங்கள், 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியான உங்கள் நிறுவன நாள், உங்களுக்காக புதிய வாய்ப்பை ஏந்திக் காத்திருக்கிறது, நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இந்த நேர்மைக் கொண்டாட்டத்தில் பங்கெடுக்க நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். உங்கள் பணியின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள், அதன்படி உங்கள் பாதையை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சமூகம் உங்களை எத்தனை பெருமிதத்தோடு பார்க்கும் தெரியுமா!! இதை நீங்களே அனுபவபூர்வமாக உணருங்கள்!!

நண்பர்களே, tax return என்ற சொல்லுக்கு பல விளக்கங்கள் இருக்கின்றன. ஆனால் என்னைப் பொறுத்த மட்டில் வரிவசூல் தேசத்தின் முன்னேற்றத்திற்கு உதவுகிறதா இல்லையா என்று தான் பார்க்கிறேன். இது தான் சரியான tax return. வரிவருமானம். இது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இதன் மூலமாக தனது வாழ்க்கை முழுவதும் விறகடுப்பில் உணவு சமைத்த, யாரோ ஒரு ஏழைப் பெண்ணுக்கு எரிவாயு இணைப்புக் கிடைக்கிறது. பிள்ளைகளால் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட யாரோ ஒரு முதியவருக்கு இந்தப் பணத்தின் வாயிலாக ஓய்வூதியம் கிடைக்கிறது. நாள்முழுவதும் உழைக்கும் இளைஞர்களுக்கு இந்தப் பணம் மூலமாகத் தான் சுயவேலைவாய்ப்பு கிடைக்கிறது. அப்போது தான் அவரால் மாலையிலும் இரவிலும் சென்று தனது படிப்பை நிறைவு செய்ய முடிகிறது. சிகிச்சைக்குப் பணம் இல்லாத யாரோ ஒரு ஏழைக்கு, நோயிலிருந்து விடுபட மலிவுவிலையில் மருந்துகள் கிடைக்கின்றன. நோய்வாய்ப்பட்டதால் அவரால் விடுப்பு எடுத்துக் கொள்ள முடியாது. ஆகையால் அவர் நோய்வாய்ப்பட்டிருந்தும் நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி உழைத்தால் தான் அவரது குழந்தைகள் இரவில் பட்டினியோடு உறங்க வேண்டியிருக்காது.

வரியால் கிடைக்கும் பணம், சாகஸம்மிக்க இராணுவ வீரர்களுக்கு உதவியாக இருக்கிறது. அவர்கள் தான் தங்களது உயிரைப் பணயம் வைத்து நம்மனைவரையும் எல்லைகளில் பாதுகாக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மின்சாரம் நுழையாத வீடுகளில், இன்று வரை ஒரு பல்பு கூட எரியாத வீடுகளில், மின்சாரத்தைக் கொண்டு செல்ல இந்தப் பணம் உதவியாக இருக்கிறது. அவர்கள் இருளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். தேசத்தின் ஏழைகளுக்கு அவர்கள் உரிமைகளைப் பெற்றுத் தருவதில் உதவியாக இருப்பதை விடப் பெரிய சேவை வேறு என்னவாக இருக்க முடியும்!! உங்களின் ஒரு கையொப்பம் தேசத்தின் ஏழைகளுக்கு எத்தனை பேருதவியாக இருக்கிறது பாருங்கள்!! தேசத்தின் சாமான்ய மக்களின் கனவை நனவாக்குவதில் உங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. இதில் நீங்கள் மிகப்பெரிய பங்காற்ற முடியும். நீங்கள் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்துங்கள்; 2017ஆம் ஆண்டு ஜூலை ஒண்ணாம் தேதி ICAIயின் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, இது எனது ஆன்மாவின் குரல்.

என் நண்பர்களே, நீங்கள் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தினால், என்னால் நம்பிக்கையோடு கூற முடியும், வரி ஏய்ப்பு செய்யும் தைரியம் யாருக்கும் வராது. யாராவது தன்னைக் காப்பாற்றி விடுவார்கள் என்று தெரியும் போது தான் மனிதன் தவறிழைக்கிறான். நண்பர்களே, ஜி.எஸ்.டி, தேசத்தை உருவாக்குவதில் நீங்கள் உறுதுணை நல்க ஒரு வாய்ப்பாக உங்கள் முன்பு மலர்ந்திருக்கிறது. நீங்கள் மக்களுக்கு, நீங்கள் மக்களிடம் செல்லுங்கள், அவர்களோடு பேசுங்கள், நான் வரும் போது நீலேஷ் என்னிடம் கூறினார், வியாபாரிகளுக்கு உதவியாக இருக்கும் வகையில், அவர்களுக்கு புரிய வைக்க உதவி செய்வோம் என்றார். நான் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன், அவருக்கு என் நன்றிக்கடனை வெளிப்படுத்துகிறேன். நீங்கள் மக்களிடம் செல்லுங்கள், அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுங்கள். நேர்மை என்ற பிரதான நீரோட்டத்தில் இணைய அவர்களை உத்வேகப்படுத்துங்கள். அந்த வகையில் பட்டயக் கணக்காளர்கள் துறையினருக்கு, அரசு ஒரு புதிய வாய்ப்பை அளித்திருக்கிறது. இப்போதிலிருந்தே இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுங்கள், குறிப்பாக நான் இந்தத் தொழிலில் இருக்கும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

வாருங்கள், அரசு கடந்த நாட்களில் நிறைவேற்றியிருக்கும் ஒரு சட்டம், insolvency and bankruptcy code, திவாலா சட்டம் – இதை வெற்றியடையவும் சரியான முறையில் செயல்படுத்தவும் பட்டயக் கணக்காளர் துறையினர் மிகப் பெரிய பங்காற்ற முடியும். இந்தச் சட்டத் தொகுப்புக்கு உட்பட்டு, எந்த நிறுவனம் நொடித்துப் போகிறதோ, அது insolvency practitioner, இந்தத் துறையில் தேர்ச்சி பெற்றவரின் கட்டுப்பாட்டில் தான் வரவிருக்கிறது. பட்டயக் கணக்காளர்கள் இந்த சட்டத் தொகுப்பில் தேர்ச்சி பெற்று, இந்தப் புதிய துறையில் தங்கள் தொழிலைத் தொடக்க முடியும். இது ஒரு புதிய பாதை, இதை அரசு உங்களுக்குத் திறந்து வைக்கிறது. ஆனால் இன்று முதல், நீங்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் CAவுக்கான விளக்கம் Character and Accuracy, குணம் மற்றும் துல்லியம், இவையாகவே இருக்க வேண்டும்.

நண்பர்களே, 2022இல் நமது தேசம் சுதந்திரம் அடைந்து தனது 75ஆவது ஆண்டை நிறைவு செய்யவிருக்கிறது. இந்த ஆண்டை முன்னிட்டு தேசம் பல தீர்மானங்களை மேற்கொண்டிருக்கிறது. புதிய பாரதம் நம் அனைவரின் உழைப்பையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நீங்களும் ஒரு நிறுவனம் என்ற முறையிலும், பட்டயக் கணக்காளர் என்ற வகையிலும், தேசத்தின் குடிமகன் என்ற நிலையிலும் பங்காற்ற முடியும். 2022ஆம் ஆண்டு பாரதம் விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், நம் தேசத்தை நாம் எப்படிக் காண வேண்டும். அப்படிப்பட்ட தேசத்தை உருவாகக் நாம் நமது பங்களிப்பை நல்குவோம். நமது பங்காற்றுவோம், 2022ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதற்கு சரியாக ஈராண்டுகள் கழித்து, institute of Chartered Accountants of Indiaவும் தனது 75 ஆண்டுக்காலத்தை நிறைவு செய்யும்.

நீங்கள் இப்போதிலிருந்தே 75 ஆண்டுக்கான செயல்திட்டங்களில் ஈடுபடத் தொடங்குங்கள். இந்த அமைப்பின் குறிக்கோளை எந்த சிகரத்தை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்புக்காக காத்திருங்கள், அதற்கு இப்போதிலிருந்தே திட்டங்கள் தீட்டுங்கள். நீங்கள் தேசத்துக்கு என்ன அளிப்பீர்கள் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். தேசத்தில் தங்கள் ஆசைகள் அபிலாஷைகளோடு வசிக்கும் கோடானுகோடி இளைஞர்களின் எதிர்காலத்திற்கு என்ன செய்வீர்கள். உங்களால் தேசத்தில் ஒரு ஒளிவுமறைவற்ற, ஊழலற்ற அமைப்பை ஏற்படுத்துவதில் உதவி செய்ய முடியாதா, கூறுங்கள்!! நான் இத்தனை பேர்களை வரி செலுத்துவதிலிருந்து காப்பாற்றி இருக்கிறேன் என்று கணக்குப் பார்ப்பீர்களா அல்லது இத்தனை பேர்களை வரி செலுத்தி, நேர்மையான வாழ்க்கை வாழ ஊக்கம் அளித்திருக்கிறேன் என்று கூறுவீர்களா?

முடிவு உங்கள் கைகளில். உங்களுக்காக, நீங்கள் உங்களுக்கான இலக்கை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள் – எத்தனை பேர்களை நேர்மையாக வரி செலுத்துவது என்ற பிரதான நீரோட்டத்தில் கொண்டு வருவது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். இந்த இலக்கின் புள்ளிவிவரம் என்ன என்பதை உங்களை விடச் சிறப்பாக யாரால் கூற இயலும்? உங்களால் உங்கள் தொழிலில் தொழில்நுட்பத்தை அதிகப்படுத்த முடியும் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். Institute of Chartered Accountants துறையில் தடயவியல் அறிவியலுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இதை எப்படிக் கருத்தில் கொள்வது, இதற்கேற்ப எப்படி செயல்படுவது என்பதோடு தொடர்புடைய இலக்கும் சாத்தியமாக வேண்டும். இதைத் தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.

நண்பர்களே, என் மனதில் இன்னொரு எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதை நிறைவேற்றும் வல்லமை உங்களிடத்தில் இருக்கிறது, உங்களிடம் அந்தத் திறன் இருக்கிறது என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் ஏன் பின் தங்கி இருக்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை நண்பர்களே. எனக்குப் பிரியமானவர்களே, உலகில் 4 பெரிய அமைப்புகள் மிகவும் மதிப்பு மிக்கவை. பெரிய பெரிய நிறுவனங்களும் அமைப்புகளும் தங்கள் தணிக்கைப் பணியை உங்களிடம் அளிக்கின்றன. இந்த நிறுவனங்களை Big Four என்று அழைக்கிறார்கள். இந்த 4 பெரிய நிறுவனங்களில் நாம் இடம் பெறவில்லை. உங்களிடம் திறன் இருக்கிறது, தகுதிக்குக் குறைவேதும் இல்லை. என் அனைத்து நண்பர்களும் இணைந்து, உலகில் இந்தியாவின் பெயரை ஓங்குவிக்க வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து, 2022ஆம் ஆண்டில் சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டைக் கொண்டாடும் வேளையில், இந்த big fourஐ, big oeightஆக மாற்ற முயல்வோமே!! அந்த பெரிய 8 நிறுவனங்களில் இடம்பெறும் பெரிய 4 நிறுவனங்கள், இதோ என் முன்னால் இருக்கும் இவர்களில் ஒருவராக இருப்பார்கள்.

நண்பர்களே, இந்தக் கனவை நாம் காண வேண்டும். இந்த பெரிய 8 நிறுவனங்களில் இடம்பெற நமது 4 கம்பெனிகளின் நன்மதிப்பையும், தொழில் தேர்ச்சியையும் ஏற்படுத்துவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. உலகில், பட்டயக் கணக்காளர்கள் உலகத்திலும் உங்கள் முரசமே ஒலிக்க வேண்டும் என் நண்பர்களே. நிறைவாக நான் உங்களுக்கு, உங்கள் துறையின் மிகப் பழமையான, மிகவும் மதிப்புமிக்க பொருளாதார வல்லுனரான சாணக்கியனின் ஒரு ஆலோசனையை நினைவூட்ட விரும்புகிறேன். कालाति क्रमात काल एव फलम पिबति….. அதாவது கடமையாற்றுக் காலம் கடந்த பின்னர், காலமே அதன் வெற்றிக்கு முடிவு கட்டி விடுகிறது.

ஆகையால் இந்த நல்வாய்ப்பை கைநழுவ விட்டு விடாதீர்கள். சற்று நேரம் முன்பாக அருண் அவர்கள் தன் உரையில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் வாழ்க்கையில், இந்த உலகில், இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இதற்கு முன்னர் வந்ததில்லை. உங்கள் வாழ்க்கையிலும் இதற்கு முன்பாக இப்படிப்பட்ட வாய்ப்பு வந்திருக்காது. இந்த வாய்ப்பை கைநழுவ விட்டு விடாதீர்கள் நண்பர்களே. நான் உங்களை, நாட்டை உருவாக்கும் பிரதான நீரோட்டத்தில் இணைய அழைப்பு விடுக்க வந்திருக்கிறேன். இந்தத் தொழிலில் தான் சமுதாயத்தின் ஒட்டுமொத்த பொருளாதார அமைப்பைக் காப்பாற்றி, ஸ்திரப்படுத்தும் வல்லமை இருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். நான் மீண்டும் ஒருமுறை இந்த அமைப்புக்கும், இதன் ஆசிரியர் உறுப்பினர்களுக்கும், இங்கே வந்திருக்கும் அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும், ICAIயின் நிறுவன நாளை ஒட்டி பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு முழுவதிலும், இந்த நிகழ்ச்சியை காணொளி மூலம் கண்டுகொண்டிருக்கும் உலகின் சில நாடுகளில் இருக்கும் நமது பட்டயக் கணக்காளர்களுக்கும் எனது நிறைவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி ஒரு புதிய திசை, ஒரு புதிய வேகம், ஒரு புதிய உற்சாகம் பிறக்கட்டும்; வாருங்கள் நாம் பயணிப்போம், தேசத்தின் சாமான்ய மக்களை நேர்மையின் கொண்டாட்டத்தோடு இணைப்போம் என்ற என் விருப்பத்தைத் தெரிவித்து நன்றி கூறி விடைபெறுகிறேன். மிக்க நன்றி நண்பர்களே, மிக்க நன்றி.

சென்னை வானொலியில் ஒலிபரப்பான உரை:

தமிழாக்கம் மற்றும் குரல் வடிவம்: ராமஸ்வாமி சுதர்ஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe