ஹிந்து தேசியவாத சிந்தனை இந்தியாவில் அதிகரித்து வருவது, இந்தியாவின் சீனக் கொள்கையை கடத்திவிட்டது, போருக்கு வழிவகை செய்கிறது என சீன ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது.
சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச் சந்திப்பான டோக்லாம்- டோகாலா பகுதியில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு செயல்பாட்டை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளைக் குவித்துள்ளன.
இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் எனக் கூறி வருகிறது சீனா. அவ்வாறு வாபஸ் பெறா விட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது. இந்தியாவோ, ராணுவத்தை திரும்பப் பெற முடியாது, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் எனக் கூறியது. இந்தியா ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி வரும் சீனா, எல்லையில் அடிக்கடி போர்ப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், சீன அரசின் ஊடகத்தில் பல்வேறு ஆத்திரமூட்டும் கட்டுரைகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. சீனாவின் வெளியுறவுக் கொள்கையை வெளிப்படுத்தும் வகையிலான அக்கட்டுரையில் இந்த முறை இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைத்துள்ளது. இந்தியாவில் ஹிந்து தேசிய வாத சிந்தனை அதிகரித்து வருகிறது எனவும், அது, இருநாட்டுக்கும் இடையில் போருக்கு வழிவகுக்கும் என்றும் கூறுகிறது. இது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைப்பது மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சீன ஆதரவாளர்களிடம் ஹிந்து தேசியவாதத்துக்கு எதிரான மனநிலையைத் தூண்டி, போருக்கு ஆயத்தப் படுத்தும் அறைகூவலை விடுப்பது போன்றதுதான் என இந்திய அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதாவது, இந்தியாவில் ஹிந்து தேசியவாத சிந்தனை அதிகரித்து வருவது, இந்தியாவின் சீனாவுடனான கொள்கையைக் கடத்திவிட்டது எனவும், இது போருக்கு வழிவகை செய்யும் எனவும் சீனாவின் அரசு ஊடகம் அப்பட்டமாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஹிந்து தேசப்பற்று அதிகரித்து வருவது பிரதமர் மோடியின் சீனக் கொள்கையை கடத்திவிட்டது, இது இருநாடுகள் இடையே போருக்கு வழிவகை செய்யும் என்கிறது சீன அரசு ஊடகத்தின் செய்தி. இந்தியாவுக்கு பெரும் உயிர் மற்றும் உடமைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று அது இந்தியாவை எச்சரிக்கிறது. வழக்கம் போல் இந்தியா பலவீனமானது என்றும், சீனா வலிமையானது எனப் பாராட்டுவது போன்றும், இந்திய அரசியல்வாதிகள் அதை உணர்ந்து கொள்ளாமல் உள்ளனர் என்றும் சீன ஊடகம் இந்தக் கட்டுரையில் கருத்து தெரிவிக்கிறது.
இந்தியாவில் 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரான ஹிந்து தேசப்பற்றாளர்களின் வன்முறையைத் தடுக்க தவறிவிட்டது என புது வகையில் ஒரு கதையைப் புனைந்துள்ளது. சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் முதல் முறையாக இவ்வாறு கட்டுரை வெளியிட்டு, இந்தியாவின் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தானுடன் தங்கள் நாடும் கைகோர்த்துள்ளதை பலமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும், ஹிந்து தேசப் பற்றாளர்களுக்கு தீனி போடவே, இப்போதைய மோதல் திட்டத்தை இந்தியா செயல்படுத்தியுள்ளது எனவும், மோடி அரசு சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான வலுவான அரசியல் எதிர்ப்புக் கொள்கையின் மூலம் மக்களை திசைதிருப்புகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய முலாயம் சிங் யாதவ், பாகிஸ்தானுடன் கைகோத்து சீனா இந்தியாவின் மீது தாக்குதல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.