திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் இன்று கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் வரலாறு காணாத அடிதடி ரகளை நடைபெற்றது. ரகளைக்கு நடுவே பட்ஜெட் உரையும் வாசிக்கப்பட்டது. கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் (மாணி) கட்சியின் தலைவர் கே.எம். மாணி நிதியமைச்சராக உள்ளார். கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு மதுபான பார்களை மூட உத்தரவிட்ட போது, அவற்றை திறக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி மதுபார் உரிமையாளர்களிடம் மாணி லஞ்சம் பெற்றார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மதுபார் உரிமையாளர் சங்க தலைவர் பிஜு ரமேஷ், நிதி மந்திரி மாணிக்கு ரூ.1 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டியிருந்தார். இதனால், மாணி பதவி விலக வேண்டுமென எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சட்டசபையில் மாணியை பட்ஜெட் தாக்கல் செய்ய விட மாட்டோம் என்றும் அறிவித்தனர். இதற்கு உம்மன் சாண்டி கண்டனம் தெரிவித்தார். மாணி மீது எந்த தவறும் இல்லை. அவர் மார்ச் 13-ல் நிச்சயம் பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றார். இதனால் நேற்று முதலே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. மாணி பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் இருக்கை முன்பு சென்று ஆவேசமாகக் கூச்சலிட்டனர். பின்னர் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகளை எடுத்து வீசினர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. போராட்டம் காரணமாக சட்டசபை ஊழியர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சட்டசபை வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். பல எம்.எல்.ஏ.க்கள் மாணியை முற்றுகையிட்டு அவர் பட்ஜெட் உரையை படிக்க விடாமல் தடுத்தனர். உடனே அவர் பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்வதாக கூறி மேஜை மீது அதனை வைத்தார். மாணி பட்ஜெட்டை படிக்க விடாமல் தடுத்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் உறுப்பினர்கள் தடுத்தனர். இதனால் சபைக்குள் கடும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து சட்டசபையில் அமளி நிலவியது. சபையில் ஏற்பட்ட கைகலப்பில் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சிவன்குட்டி உள்பட 3 எம்.எல்.ஏ.க்கள் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். அவர்களை சபை காவலர்கள் உடனடியாக வெளியே கொண்டு சென்றனர். சட்டசபையில் அமளி நடந்த அதே வேளையில் சபைக்கு வெளியே கூடி நின்ற தொண்டர்கள் சட்டசபையை நோக்கி கற்களை வீசினர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. கல்வீச்சு மற்றும் போலீஸ் தடியடியில் கம்யூனிஸ்டு தொண்டர்கள் பலர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
To Read this news article in other Bharathiya Languages
கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் கடும் அடிதடி, ரகளை: எம்.எல்.ஏ.க்கள் மயக்கம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari