டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார். அவர்களில் எம்.எல்.ஏ ஜக்கையன் தவிர 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சபாநாயகர் தனபால் சார்பில் சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்திய அரசமைப்புச் சட்டம், பத்தாவது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ், பேரவைத் தலைவர், கீழ்க்காணும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களை 18.9.2017 முதல் தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள்:
தங்க தமிழ்ச்செல்வன் – ஆண்டிபட்டி தொகுதி
ஆர்.முருகன் – அரூர்
மாரியப்பன் கென்னடி – மானாமதுரை
கதிர்காமு – பெரியகுளம்
ஜெயந்தி பத்மநாபன் – குடியாத்தம்
பழனியப்பன் – பாப்பிரெட்டி பட்டி
செந்தில் பாலாஜி – அரவக்குறிச்சி
எஸ். முத்தையா – பரமக்குடி
வெற்றிவேல் – பெரம்பூர்
என்.ஜி.பார்த்திபன் – சோளிங்கர்
கோதண்டபாணி – திருப்போரூர்
ஏழுமலை – பூந்தமல்லி
ரெங்கசாமி – தஞ்சாவூர்
தங்கதுரை – நிலக்கோட்டை
ஆர்.பாலசுப்பிரமணி – ஆம்பூர்
எஸ்.ஜி.சுப்ரமணியன் – சாத்தூர்
ஆர்.சுந்தரராஜ் – ஒட்டப்பிடாரம்
கே.உமா மகேஸ்வரி – விளாத்திகுளம்