திருவனந்தபுரம்:
ஷார்ஜாவில் பயன்படுத்தும் டிரைவிங் லைசன்ஸ் இனி கேரளத்திலேயே பெற்று விடலாம். அதற்கான ஏற்பாடு விரைவில் துவங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அரசுமுறை பயணமாக கடந்த ஞாயிறு முதல் கேரளத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் இங்கே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். அப்போது, டாக்டர். ஷேக் சுல்தானிடம் கேரள முதல்வர் பிணரயி விஜயன் ஒரு கோரிக்கை விடுத்தார். அதன்படி, ஷார்ஜாவில் செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் மையம் ஒன்றையும், அரபி மொழி பயிற்சி மையம் ஒன்றையும் ஏற்படுத்த சுல்தான் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதனால், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைவாய்ப்பு வேண்டி செல்பவர்கள் கேரளாவில் அமைக்கப்படப் போகும் இந்த மையத்திலேயே டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது கேரளாவில் அமீரக துணை தூதரகம், வாடகை கட்டடத்தில் இயங்கிவருகிறது. அதற்கு சொந்தக் கட்டடம் கட்டத் தேவையான நிலத்தை வழங்க கேரள அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதேபோல் ஷார்ஜாவில் 20 ஏக்கர் நிலத்தில் கேரளா கலாச்சார மையம் ஒன்றை அமைக்க அனுமதி தருமாறு பிணரயி விஜயன், சுல்தானிடம் வேண்டுகோள் வைத்தார். இதில் கட்டடப்படும் கட்டடத்தில் கேரள மக்கள் குடும்பத்துடன் வசிக்கவும், 10 ஏக்கர் இடத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை, ஆயுர்வேத மருத்துவமனை, கேரளாவின் கலாசாரம் கலை பண்பாடுகளை எடுத்துக்கூறும் மையம் அமைக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அந்த மையத்தினுள் கேரள மக்கள் சமூக கூட்டங்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொள்ளஅனுமதி அளிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.