புதுதில்லி:
தில்லியில் ஹெல்மட் அணியாமல் கிரீடம் அணிந்து பைக்கில் சென்ற ராவணன் வேட நடிகருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
புதுதில்லி, செங்கோட்டையில் ஆண்டுதோறும் நவராத்திரியை ஒட்டி ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் ராம் லீலா நாடகத்தில், ராவணன் வேடத்தில் நடித்த முகேஷ் ரிஷி என்பவர், ராவணன் தோற்றத்துக்கு ஏற்ப கிரீடம் அணிந்தபடி தில்லியில் சாலைகளில் பைக்கில் பயணம் செய்தார்.
இவ்வாறு ராவணனாக அவர் பயணம் செய்த இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. ஆனால் இந்தப் படத்தில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்றதாக போக்குவரத்து போலீசார் கருதினர். இதை அடுத்து, போக்குவரத்து போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். நோட்டீஸைப் பெற்றுக் கொண்ட முகேஷ் ரிஷி, போக்குவரத்து போலீஸ் அலுவலகத்திற்கு நேரில் சென்று அபராதத்தை செலுத்தியதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.