புது தில்லி:
ராகுல் காந்தி இன்னமும் சின்னப் புள்ளையாகத்தான் இருக்கிறார் என்று கிண்டலடித்துள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
மேற்கு தில்லியில் உள்ள சக்கூர் பஸ்தி பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 500 குடிசை வீடுகள் ரயில்வே துறையால் இடித்துத் தள்ளப்பட்டது. நேற்று காலை அந்த இடத்துக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்ற ராகுல் காந்தி குடிசைகளை இழந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் பேசிய போது,
‘‘மோடியின் மத்திய அரசும், கேஜ்ரிவாலின் மாநில அரசும்தான் இதற்குக் காரணம். குடிசைவாசிகளின் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.’’ என்றார்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த தில்லி முதல்வர் கேஜ்ரிவால், ‘‘ராகுல்காந்தி இன்னும் சிறு குழந்தையாகத்தான் இருக்கிறார். அவருடைய கட்சியினர், முதலில் அவருக்கு ரயில்வே துறை மத்திய அரசின் கீழ் உள்ளது; தில்லி மாநில அரசின் கீழ் இல்லை என்பதை எடுத்துச் சொல்லி விளக்க வேண்டும்’’ என்று கிண்டலடித்தார்.