சென்னை:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில், மீண்டும் அதிகாரிகள் வருமான வரி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.
இந்த சோதனையின்போது, விஜயபாஸ்கரின் வீடுகளில் இருந்து ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. அது குறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் நேரில் விளக்கம் அளித்தார். அவர் மீது வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை என்றாலும், விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏற்கெனவே நடைபெற்ற சோதனையின்போது, ஓர் அறையைப் பூட்டி சீல் வைத்துச் சென்றனர். தற்போது அந்தப் பூட்டிக்கிடக்கும் அறையைத் திறந்து சோதனைசெய்கின்றனர். சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள், நகைகள் சரி பார்க்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.