காரைக்கால் :
காரைக்கால் அருகே உள்ளது திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில். இன்று முற்பகல் கோயில் தேவஸ்தான அலுவலக கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கோயில் நடவடிக்கைகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருந்த ஹப்.. பகுதியில் ஏற்பட்ட மின் கேபிளில் ஏற்பட்ட ஷார்ட்சர்க்யுட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாம். தீ மள மள வென பரவி, அங்கிருந்த யுபிஎஸ், கணினிகள், மின்சாதனங்கள், ஏசி, கேமராக்கள் உள்ளிட்டவை முற்றிலும் சேதம் அடைந்தன.
தேவஸ்தான கணக்கு வழக்குகள் குறித்த ஆவணங்கள், முக்கியமான பொருள்கள் வேறு அறையிலும், வாகன மண்டபத்தை ஒட்டிய அறையிலும் வைக்கப்பட்டிருந்ததால், இந்தத் தீவிபத்தால் அவை ஏதும் பாதிக்கப்படவில்லை.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன. பின்னர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக கோயில் வளாகத்துக்கு வந்து, தீவிபத்து குறித்து விசாரணை செய்து பார்வையிட்டார்.
திருநள்ளாறு கோயிலில் வழக்கமாக சனிக்கிழமைகளில் அதிக பக்தர்கள் வருகை இருக்கும். இன்னும் ஆறு மாதங்களில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற இருப்பதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னமேயே தொடங்குவதும் வழக்கம்.