ரோதக்:
அரியானாவில் ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் தன் மீது ‘ஷூ’ வீசப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
அரியானா மாநிலம் ரோதக்கில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றதை கண்டித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது ரூ. 65 கோடி லஞ்சம் பெற்றார் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வைத்த குற்றச்சாட்டை மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்தார். ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு முன்னரே பாரதீய ஜனதாவினர் தங்களிடம் இருந்த கருப்பு பணத்தை ரியஸ் எஸ்டேட் போன்ற தொழில்களில் முதலீடு செய்துவிட்டனர் என்றார் கெஜ்ரிவால்.
அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீசினார். ஆனால் அந்த ஷூ அவர் மீது விழவில்லை. உடனே ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த விகாஷ் (வயது 26) என்பதும், பட்டதாரியான அவர், வேலை எதுவும் இன்றி இருந்தார் என்றும் தெரியவந்தது. அவர் மனநிலை தெளிவாக இருந்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பேசியதால் அவர் ஷூ வீசியதாகவும், போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே இச்சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் என் மீது ‘ஷூ’ வீசப்பட்டதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று கூறிஉள்ளார். “பிரதமர் மோடி ஒரு கோழை என்று நான் ஒருமுறை கூறினேன். என்னுடைய வார்த்தையானது இப்போது நிரூபனம் ஆகிஉள்ளது. என்னை எதிர்க்கொள்ள பிரதமர் மோடியிடம் தைரியம் கிடையாது. எனவே தான் என் மீது ஷூ க்களை வீச அவருடைய ஷூக்களை அனுப்பியுள்ளார்,” என்று குற்றம் சாட்டினார்.