98ல் டீ பார்ட்டி நடத்தினார் ஜெயலலிதா. செய்த ஊழல்களுக்கு கேடயமாக மத்திய அரசு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவருக்கு இடி! ஒத்தை ஓட்டில் ஓரங்கட்டி பழி தீர்த்தார். அந்த வகையில், தமிழர்களின் பேரழிவுகளுக்கு வித்திட்ட பெருந்தகையாளர் ஜெயலலிதா!
அவரால், அடுத்து 99ல் அவர் விட்ட இடத்தை திமுக., பிடித்துக் கொண்டது. புத்தம் புதிதாய் விஞ்ஞான ஊழல்களுக்கான வாசலைத் திறந்து கொண்டது. பேரம் படியவில்லை!
2004ல் அணியை மாற்றிக் கொண்டது. அதுவே மெகா ஊழல்களுக்கான நங்கூரம்! அந்த ஆட்சியின் இறுதிக் கட்டத்தில்தான், இலங்கையில் போர். அந்த நேரத்தில் எத்தனை நாடகங்கள் இங்கே! ஒருபுறம் குடும்பத்தாரின் பதவிகளுக்கு பாதிப்பு வரக்கூடாது. மறுபுறம் ஊழல் பணமும் ஒட்டு மொத்த செல்வமும் பறிபோய் விடக் கூடாது. மேலும் தொடர வேண்டுமானால் கெஞ்சிக் கூத்தாடியாவது மத்திய அரசில் தொடர வேண்டும். இத்தனைக்கும் மத்திய அரசின் முக்கிய கட்சி காங்கிரஸே கூட எட்டி மிதித்து வெளியில் தள்ளிய நிலையில், தில்லி சென்ற திமுக தலைவர், சோனியாவை சந்தித்து பூக்கொத்து கொடுத்து எப்டியாவது கழற்றி விட்டுவிடாதீர்கள் என்று கெஞ்சினார்.
ஆனால் அதே நேரம்… இலங்கையில் இறுதிக் கட்டப் போர். காங்கிரஸ் அரசு உதவியது இலங்கைக்கு! அங்கம் வகித்த திமுக சுயநலன் கொண்டு ஆதரித்தது. அப்போது, திமுக., காங்கிரஸில் இருந்து வெளியில் வந்து பழைய தே.ஜ.கூட்டணியில் சேரும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், திமுக., வெறும் மதவாதம் என்ற ஒற்றைச் சொல்லைக் கொண்டு, சுயலாபம் தேடியது. அதில் சாகடிக்கப்பட்டது – இலங்கைத் தமிழர்களின் எண்ணற்ற உயிர்கள்! அடுத்து, பிரபாகரனின் நம்பிக்கை!
திமுக., மட்டும் அப்படி ஒரு மாறுபட்ட முடிவு எடுத்திருந்தால்… 2009 தேர்தலின் முடிவே மாறிப் போயிருக்கும்! மத்தியில் மீண்டும் காங்கிரஸ் வந்திருக்காது. தொங்கு நாடாளுமன்றம் அமைந்தும் வடக்கத்தி உதிரிகளின் துணையுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைந்திருக்காது.
அந்த தேர்தல் முடிவு வந்த நாள்… 16.05.2009
காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கி முடிவுகள் டிவிக்களில் வெளிவந்துகொண்டிருந்தபோது, துவக்கம் முதலே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி முகத்தில் இருந்தது.
அங்கே இலங்கையில், அதற்கு முன்னர் வரை, மத்தியில் தே.ஜ.கூட்டணி அரசு அமைந்துவிடாதா என்ற நப்பாசையில் போரை இழுத்துக் கொண்டே சென்றார்கள் விடுதலைப் புலிகள்! திமுக.,வின் துரோகம் அவர்களுக்குப் பேரிடியாய் அமைந்திருந்தது. அதற்கு முன்னதாக 5 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மேற்கொண்ட தீவிர பழிவாங்கும் போக்கினால், போர் மூலம் தாங்கள் சந்தித்த இழப்பு, இந்தியாவில் ஆட்சி மாறினால் சரியாகிவிடக் கூடும் என்று நம்பிக் கொண்டிருந்தனர் புலிகள்.
ஆனால், இங்கே இந்தியாவில் தேர்தல் நடந்து கொண்டிருந்த போதுதான், மூர்க்கத்தனமாக இலங்கையில் போர் நடந்தது.
இங்கே தேர்தல் முடிவுகளை இந்திய மக்கள் மட்டும் ஆவலோடு நோக்கியிருக்கவில்லை, இலங்கையும்தான்! அதற்காக அந்த 16.05.2009 வரை பல்வேறு வழிகளில் பதுங்கி, படகுகளில் தப்பித்து, உயிர் தப்பி, கொஞ்ச நஞ்ச நம்பிக்கையுடன் புலிகள் பிரிந்து சென்றிருந்தார்கள்.
மே.17 அன்று காலை இந்தியாவில் ஐ.மு.கூட்டணி பெரும்பான்மை, மீண்டும் ஆட்சி என்று தலைப்புச் செய்திகள் சொன்னபோது… இலங்கையில் அதே நாள், போரில் புலிகள் படுதோல்வி, சரணடைந்தனர், பிரபாகரன் கொல்லப்பட்டார்… என்று தலைப்புச் செய்திகள்!
மே. 18 பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று இலங்கை அதிகாரபூர்வமாக அறிவித்தது. மே. 19ல் இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் மகிந்த மகிழ்ச்சியுடன் பல்லிளித்தபடி பிரபாகரனின் மரணத்தை அறிவிக்கிறார்….
இப்போது யோசித்துப் பாருங்கள்!
பிரபாகரன், விடுதலைப் புலிகள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இங்கே அரசியல் நடத்தும் திருமாவளவன், திமுக.,வுக்கு முட்டுக் கொடுக்கும் சீமான், மிஷனரிகளால் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ள மே.17 இயக்கம்… இன்னும் தமிழர் அமைப்புகள்… எல்லாம் இன்று என்ன பேசுகின்றன என்பதைக் கவனியுங்கள்!
ஆனால்…
2009ல் எந்த ஆட்சி மாற்றத்தால் இலங்கையில் விடிவுகாலம் பிறக்கும் என்று பிரபாகரனும் தமிழர்களும் நம்பினார்களோ…
அந்த ஆட்சி மாற்றத்தால்தான்…
அதுவும் இந்திய வடக்கத்தி வாக்காளர்களின் துணையுடன் ஆட்சிக்கு வந்த பாஜக.,வினால்தான்…
பிரபாகரன் கொல்லப் படவும், தமிழர்கள் இரக்கமற்ற வகையில் உயிர்க்கொலை செய்யப்படவும் காரணமாக அமைந்த ராஜபட்ச அரசையும் பின்னணியில் இயங்கிய பழிவாங்கும் அரசியலையும் தூக்கி எறிய, அதுவும் ராஜதந்திரத்தால் துரத்தியடிக்க முடிந்தது.
அதே ஆட்சி மாற்றத்தினால்தான் இன்று இலங்கையில் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தம்மாலான ஆக்க பூர்வ பணிகளைச் செய்ய முடிகிறது.
காரணம்… இலங்கை தனி நாடு. ஆனால், இந்தியாவின் வேர்களைக் கொண்டுள்ள தனித்துவமான நாடு. அந்நாட்டின் இறையாண்மை அதற்கு முக்கியம். ஆனால், அந்நாட்டின் ஆட்சியாளர்கள் துணை இல்லாமல் இலங்கைக்கு தாம் விரும்பும் நன்மைகளை இந்திய அரசால் செய்ய இயலாது. இந்தச் சிக்கல் நிறைந்த சூழலை மோடி திறம்படக் கையாள்கிறார்…
ஆனால்… எப்போதுமே உணர்ச்சித் தூண்டுதல்களுக்கு ஆட்பட்டு விடக்கூடிய, சிந்திக்கும் திறனை இழந்துவிட்டு, சோறு போடுபவனையே நிந்திக்கின்ற குணம் புகுந்துவிட்ட தற்காலத் தமிழர்கள்… இப்போதும் மோடி ஒழிக கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
மே. 17 … நமக்கு வரலாற்றை மட்டுமல்ல… தமிழனின் மறதியையும், கூடவே அரசியல் சித்து விளையாட்டுக்குள் புகுந்து கொண்டு குவாட்டருக்கும் பிரியாணிக்குமே அடிமைப்பட்டு விட்ட அயோக்கியத்தனத்தையும் தெள்ளத்தெளிவாய்ப் படம் காட்டும் முக்கிய நாள் ஆகிவிட்டது!
மே 17 நடந்த உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய நாள். உலகத் தமிழர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடிய நாள் அல்ல!