ஜோஹன்ஸ்பர்க்கில் இன்று நடைபெற்ற முதல் டி20 இந்தியா அபார வெற்றி பெற்றது!
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவற்றில், டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை இந்தியாவும் வென்றுள்ள நிலையில், டி20 தொடரை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் போட்டியை வென்று 1-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வுசெய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷிகர் தவான் 72(39) குவித்தார். இதனால் இந்தியா 203 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது தென்னாப்பிரிக்கா. இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் தடுமாறி தென்னாப்பிரிக்க வீரர்கள் தொடர்ந்து வெளியேறினர். எனினும் ரீஸா ஹெண்டிரிக்ஸ் நிதானமாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்தார். இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.