வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆலோசகரான ஸ்டீவ் பெனான் அளித்த பேட்டியில் “சந்தேகமில்லை இன்னும் சில ஆண்டுகளில் சீனா மீது போர் தொடுக்கப்படும்” என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராகப் பதியேற்றது முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார். அமெரிக்கவாழ் வெளிநாட்டவர்களுக்கான விசா அனுமதி தொடர்பான நடவடிக்கைகளை அவரது அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இதனால், அமெரிக்க டாலர் மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. அதிபர் டிரம்ப்பின் அதிரடித் திட்டங்களில் ஒன்று, சீனா மீதான போராக இருக்கும் என மக்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள்.
டிரம்ப், தாம் பதவி ஏற்கும் முன்பே சீனா தனது நாணய மதிப்பைக் குறைத்தது குறித்தும், தென் சீனக்கடலில் ராணுவ விரிவாக்க அடாவடி நடவடிக்கை குறித்தும் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் டிரம்ப்பின் முதன்மை ஆலோசகரான ஸ்டீவ் பெனான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “சந்தேகமில்லை இன்னும் சில ஆண்டுகளில் சீனா மீது அமெரிக்கா விரைவில் போர் தொடுக்கும்” என்று கூறியுள்ளார்.
சீனா மீதான போரை உறுதிப்படுத்தும் வகையில் பேசிய பெனான், அதிபர் ட்ரம்ப்பின் தேசியப் பாதுகாப்பு மற்றும் திட்டக்குழுவில் முதன்மை ஆலோசகராக இருப்பவர். அமெரிக்கக் கடற்படையின் பசிபிக் பெருங்கடல் பகுதியில் தலைமைக் கமாண்டோ பொறுப்பில் இருந்தவர்.
பசிபிக் கடல் எல்லைப் பங்கீடு தொடர்பாக சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. சீனாவும், பசிபிக் பெருங்கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி தனது ராணுவத் தளவாடங்களை நிறுத்தியுள்ளது. கடந்த வாரம் சீன ராணுவ உயர் அதிகாரி ஒருவர், “அமெரிக்கா உடனான போர் என்பது வெறும் கனவுப் பேச்சு இல்லை. அதற்கான திட்டங்கள் நிறைவேறிக் கொண்டே இருக்கின்றது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பெனானின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. ஆனால், சீனாவுடன் போர் என்றால் அது சீனா மீதான போராக மட்டும் அது இருக்காது. சீனாவின் நேச நாடான ரஷ்யாவும், பாகிஸ்தானும் அவர்களுடன் இணையும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை உரிமைப் பிரச்னையாக மட்டும் இல்லாமல், சர்வதேச அரசியலில் மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியமாக உருப்பெற்றுவிடும். அப்படி என்றால் இன்னும் ஐந்து வருடங்களில் சீன – அமெரிக்கப் போர் வருவதற்கான ஒத்திகையாகவும் இது இருக்கக் கூடும் என்றே கருதப்படுகிறது.