இஸ்லாமபாத்:
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்துள்ளார். பனாமா லீக்ஸில் வெளியான ஊழல் விவகாரங்கள் தொடர்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை பதவி விலகுமாறு கோரியது. அதை அடுத்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள், சட்ட விரோதமாக வெளிநாடுகளில் ரகசிய முதலீடுகள் செய்திருப்பதாகவும், வங்கிகளில் ரகசியமாக பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணங்களை வெளியிட்டது. இது ‘பனாமா கேட்’ ஊழல் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊழலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் சிக்கினர். இது தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், கூட்டு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.
பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர் கூட்டுப் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்தது. கூட்டுக்குழு விசாரணையில் நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள், மகள் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்தக் குழு விசாரணை அறிக்கையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியாம் ஷெரீப், இவரது கணவர் முகம்மது சப்தார், நவாஸின் சகோதரர் ஹூசை ஷெரீப் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தீர்ப்பு என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இன்று, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்று கூறி, தகுதி நீக்கம் செய்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.
நவாஸ் ஷெரீப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை ஊழல் ஒழிப்பு நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வெளிநாடுகளில் நவாஸ் ஷெரிப் குடும்பத்தினர் சொத்துக் குவித்தது உறுதிப் படுத்தப் பட்டதால் இத்தீர்ப்பை வழங்கியதாக தெரிவித்தது.
இதனிடையே பாகிஸ்தான் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொண்ட நவாஸ் ஷெரீப் உடனடியாகத் தன் ராஜினாமாவை அளித்தார். மேலும், நவாஸ் இல்லாத பட்சத்தில் அவரது சகோதரர் பிரதமராகப் பொறுப்பேற்கக் கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நவாஸ் ஷெரீப் இதுவரை மூன்றுமுறை பிரதமர் பதவி வகித்துள்ளார். மூன்று முறையும் அவர் தனது ஆட்சிக் காலத்தை முழுதாக நிறைவேற்றியதில்லை.
1990ல் முதல் முறை பதவியேற்றபோது, தேர்தல் தில்லுமுல்லு காரணமாக விரைவில் (1993ல்) பதவியிழக்க நேர்ந்தது. இரண்டாம் முறை கார்கில் போர் வந்து, நவாஸால் பதவியில் அமர்த்தப் பட்ட ராணுவத் தளபதி முஷாரப் அதிபராகி, நவாஸை பதவியில் இருந்து விரட்டியடித்தார். இதனால் 1999ல் ராணுவத்துக்கு பயந்து சுமார் பத்து ஆண்டுகள் நவாஸ் சவுதி அரேபியா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்திருந்தார். பின்னர் நடந்த தேர்தலில் பேனசிர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக நவாஸ் தோல்வி கண்டு, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். 2013 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், அவர் முறைகேடுகளால் வெற்றி பெற்றதாக, இம்ரான் கான் குற்றம் சுமத்தி வந்தார். ஆனால், அவரது பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு வருடம் மீதமுள்ள நிலையில், முன்னதாகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இம்முறை, வெளிநாடுகளில் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டது, ஊழல் என்ற காரணத்தால் பதவி பறிபோயுள்ளது.
பாகிஸ்தானில் மூன்று அதிகார மையங்கள் நாட்டை தீர்மானிக்கின்றன. நாடாளுமன்றம், நீதிமன்றம், ராணுவம் ஆகியவை. நீதிமன்றம் கட்டளையிட்டும் நவாஸ் ஷெரிப் பதவி விலகாமல் அடம் பிடித்திருந்தால், ராணுவம் தலையிட்டு, ராணுவ ஆட்சியைப் பிரகடனப் படுத்தியிருக்கக் கூடும் என்று கருதப் படுகிறது. ஆனால், நவாஸ் தான் வெளியேறியதன் மூலம் அதற்கு வாய்ப்பு இல்லாமல் செய்திருக்கிறார். எனினும், அவரது சகோதரர் ஆட்சிக்கு வந்து, முன்னதாகவே தேர்தலை நடத்தக் கூடும் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.