இலங்கை உடனான 5 வது ஒருநாள் போட்டியிலும் வென்று அந்த அணியை 5-0 என்ற கணக்கில் தொடரை வென்று, ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.
முன்னதாக, முதல் 4 போட்டிகளில் வென்று இந்திய அணி ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், இன்று 5வது போட்டி தொடங்கியது.
முதலில் விளையாடிய இலங்கை அணி, 50 ஓவர்களுக்கு இரண்டு பந்துகள் மீதம் இருக்கையில் ஆட்டம் இழந்தது. அந்த அணி 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டம் இழந்தது. இலங்கை அணியில் திரிமன்னே 67, மேத்தீவ்ஸ் 55, தரங்கா 48 ரன்களை எடுத்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 42 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதுதான் அவரது சிறந்த பௌலிங் என்பதுடன், குமார் எடுத்த முதல் 5 விக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை அடுத்து ஆடத் துவங்கிய இந்திய அணி, துவக்கத்தில் சொற்ப ரன்களுக்கு துவக்க ஆட்டக்காரர்களை இழந்தாலும், கேப்டன் விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை தொட்டது. சர்வதேச கிர்க்கெட் அரங்கில் தனது 30வது சதத்தைப் பூர்த்தி செய்தார் விராட் கோலி. மேலும், 2017ஆம் ஆண்டில் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 365 போட்டிகளில் விளையாடி 30 வது சதம் நிறைவு செய்தார். ஆனால் கோலி 186வது போட்டியில் 30வது சதத்தை நிறைவு செட்துள்ளார்.
பின்னர் இந்திய அணி, 46.3 ஒவரில், 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களெடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக புவனேஷ்வர் குமார் அறிவிக்கப்பட்டார்.
தோனி தனது 100வது ஸ்டம்பிங் சாதனையை இன்று நிகழ்த்தினார். இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டித் தொடரை 5-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி அபார வெற்றி கண்டது.