பாலாசோர்:
அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக் கூடிய அக்னி 4 ஏவுகணைச் சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) அக்னி வரிசை ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்ற இந்த ஏவுகணைகளில் அக்னி-1, 2, 3 ஏவுகணைகள் ஏற்கனவே படைகளில் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த வரிசையில் அக்னி-4 ‘பல்லிஸ்டிக்’ ஏவுகணை தயாரிக்கப்பட்டு ஏற்கனவே 5 முறை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
இதில் 6-வது முறையாக பயனாளர் சோதனை இன்று காலையில் ஒடிசாவின் பாலாசோர் அருகே உள்ள அப்துல்கலாம் தீவில் நடந்தது. அங்குள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து நடமாடும் செலுத்து வாகனம் மூலம் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக சென்று தாக்கி அழித்தது. 2 அடுக்குகளுடன் 20 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை 17 டன் எடை கொண்டது. அணு ஆயுதம் உள்பட 1.5 டன் எடை கொண்ட வெடிபொருளை சுமந்து செல்லும் திறன் வாய்ந்த இது 4 ஆயிரம் கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கவல்லது.
முன்னதாக 5 ஆயிரம் கி.மீ.க்கு அப்பால் சென்று தாக்கும் திறன் பெற்ற அக்னி-5 ஏவுகணை கடந்த மாதம் 26-ந்தேதி இதே இடத்தில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.