கோல்கட்டா:
‛தேஜாஸ் போர் விமானத்தில் பறந்தது காரில் பயணிப்பது போல எளிதாக இருந்தது’ என சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் எங் ஹென் தெரிவித்தார்.
இந்தியா, சிங்கப்பூர் இடையே கப்பல் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்த பேச்சுவார்த்தை தில்லியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் எங் ஹென், மேற்கு வங்கத்தில் உள்ள கலைகொண்டா விமானப்படை தளத்துக்குச் சென்று நேற்று பார்வையிட்டார். பின் இந்திய தயாரிப்பான தேஜாஸ் போர் விமானத்தில் பயணித்தார். சுமார் ஒரு மணி நேரம் அவரது பயணம் நீடித்தது.
பின் ‛தேஜாஸ்’ விமானத்தில் பயணம் செய்த அனுபவத்தைக் குறித்து அவர் கூறியபோது, ‛தேஜாஸ் விமானத்தில் பயணிப்பது போர் விமானத்தில் பயணிப்பது போல் தெரியவில்லை. காரில் பயணிப்பது போல் எளிதாக உள்ளது. இதனை சிங்கப்பூருக்காக வாங்க விரும்புகிறோம்’ என்றார்.