புது தில்லி:
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு வெள்ளிக்கிழமை இன்று புறப்பட்டுச் செல்கிறார். கொழும்பில் இன்று பிற்பகல் 3.30க்கு நடைபெறவுள்ள இந்தியா – இலங்கை கூட்டு ஆணையக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
இந்தப் பயணம் குறித்து தில்லியில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் கூறியபோது…. இரு தரப்பு நல்லுறவு தொடர்பாக இரு நாட்டு அமைச்சர்களும் விவாதிப்பர். குறிப்பாக தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை இலங்கைத் தரப்பிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்குவார். இரு நாட்டு மீனவர்கள் சர்வதேசக் கடல் பகுதியில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பாக இரு தரப்பு சங்கங்களும் தொடர்ந்து பேசி வருகின்றன. துரதிருஷ்டவசமாக இந்த விஷயத்தில் அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவர்களின் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகளும் கொழும்பு பேச்சுவார்த்தையின் போது ஆராயப்படும். இலங்கைத் தமிழர்களுக்கு அந்த நாட்டில் சமஉரிமை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அதை தனது பயணத்தின் போது, அந்த நாட்டுத் தலைவர்களிடம் சுஷ்மா ஸ்வராஜ் நிச்சயம் வலியுறுத்துவார் என்று விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.