மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2 ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில், வீர வசந்தராயர் மண்டபத்தில் 3 தூண்கள் முழுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கோயில் மண்டபத்தில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. அதன் பின்னர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள பாலசுப்ரமணியன், சத்தியமூர்த்தி ஆகியோர், பாதிப்புகள் குறித்துக் கூறியபோது, கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 தூண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சேதமடைந்த பகுதிகளை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தில் மோசமாக சேதமடைந்த பகுதிகளை ஆவணப் படுத்திய பிறகு, அதில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். வீரவசந்தராயர் மண்டப சிலைகள், தூண்கள் சேதமடையாமல் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகள் எவ்வளவு நாட்களில் முடிவடையும் என்பது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறினர்.